டிரைவருக்கு திடீர் வலிப்பு நோய்.. சைன்போர்டு தூணில் மோதிய அரசு பஸ்.. கத்திப்பாராவில் நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் கிண்டி கத்திபாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் பலியான விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாம்பரத்திலிருந்து சென்னை கிண்டி கத்திபாரா செல்லும் வழியில் ஆலந்தூரில் ஒரு வழிகாட்டும் பலகை உள்ளது. இந்த பலகையில் பூந்தமல்லி, கிண்டி, கோயம்பேடுக்கு எப்படி போவது என்பது குறித்து பெரிய அளவிலான பலகை வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த பகுதியில் கூட்ட நெரிசல் இல்லாமல் இருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி இல்லாததால் அவ்வழியாக ஒரு அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.

பேருந்து ஓட்டுநர்
அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. உடனே சாலை வழிகாட்டும் பலகை நிறுவப்பட்டுள்ள இரும்பு கம்பியில் வேகமாக மோதியது. இதில் அந்த கம்பி பெயர்ந்து பலகை சரிந்து விழுந்தது.

பைக் மீது பலகை
அப்போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது பலகை விழுந்தது. இதில் பயணம் செய்த இருவரில் ஒருவர் பலியாகிவிட்டார். இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பேருந்து கம்பத்தில் மோதியதில் அதன் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது.

3 பேர் காயம்
பேருந்தில் இருந்தவர்கள் வேகமாக இறக்கப்பட்டு மாற்று பேருந்தில் அனுப்பப்பட்டனர். பேருந்து ஓட்டுநரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டு மொத்தம் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உடனடியாக பலகைகள், இரு சக்கர வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

போலீஸ் விசாரணை
இந்த விபத்து குறித்து ஆலந்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. அது போல் பேருந்தின் நடத்துநரிடமும் போலீஸார் விசாரணை செய்கிறது. உண்மையில் ஓட்டுநருக்கு வலிப்பு நோய் வந்ததா என்பது குறித்து பேருந்தின் முன்பக்கம் இருந்த பயணிகளிடம் கேட்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications