அதிகரித்த வீரியம்.. கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா? சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம்
சென்னை: கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா? என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் , இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை என்றார்.
தமிழகத்தில் வீரியமில்லாத கொரோனா வைரஸ் தொற்று பரவி வந்த நிலையில். வீரியம் அதிகமுள்ள 'க்ளேட் A3i' ஆக உருமாறி பரவி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏனெனில் இந்த வகை வைரஸ் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதியில் தான் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில் சமூக தொற்று ஏற்பட்டுள்ளதா.. மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்.. விஜயபாஸ்கர் பேட்டி
மகாராஷ்டிராவில் இருந்து பரவல்
இந்நிலையில் . மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 'க்ளேட் A3i' வகை வைரஸ் தமிழகத்துக்கு வந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதன் காரணமாகவே அண்மைக்காலமாக உயிரிழப்புகளும், பாதிப்பும் கடுமையாக அதிகரித்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
ஏனெனில் சென்னை உள்பட கொரோனா அதிக பாதிப்பை சந்தித்து வரும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. பாதிப்பும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே தான் அச்சம் மக்களிடையே அதிகரித்தது. இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷிடம் இதுபற்றி கேட்ட போது, கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.
ஆராயக் குழு அமைப்பு
மேலும் அவர் கூறுகையில், கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து ஆராய மருத்துவக்கல்வி இயக்குநரகம், பொது சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும்,. இதுவரை கொரோனா பாதிப்புடன் உயிரிழந்தவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பதை இந்த குழு ஆராயும் என்றும் கொரோனா இறப்பு விகிதம், எண்ணிக்கை குறித்து அரசு வெளிப்படையாக தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் கூறினார்.
மருத்துவ மாணவர்கள்
சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை அளிக்க 1,536 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறிய பீலா ராஜேஷ், முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளதாகவும், சென்னைக்கு 80 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
Recommended Video
சென்னையில் அதிகரிப்பு
கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ள கூறிய அவர், த்து மேலும் 5,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்காக பிரத்தியேக படுக்கைகள் ஏற்பாடு செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.