ஆர்எஸ்எஸ் “பயங்கரவாத” தொடர்பு.. பிஎஃப்ஐ-க்கு மட்டும் “குறியா”? இஸ்லாமிய இயக்கங்கள் “பரபர” புகார்
சென்னை: இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் என்ஐஏ சோதனை செய்யப்பட்டதையும், அந்த அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 22ம் தேதி அதிகாலை 2 மணி முதல் இந்திய முழுவதும் 13க்கும் மேற்ட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்கள் மற்றும் அதன் தலைவர்களது வீடுகளில் சோதனை என்ற பெயரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளை பலவந்தமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பல இடங்களில் எந்தவித ஆவணங்களையோ, ரெய்டு உத்தரவு ஆணைகளையோ காண்பிக்காமல் வீடுகளுக்குள் அத்துமீறி நுளைந்து, வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
“காந்தி கொலை” நினைவிருக்கா? ஆர்எஸ்எஸ் பேரணி தேவையில்ல.. “மதவெறுப்பு” - விளாசிய அமைச்சர் மனோ தங்கராஜ்
பையில் பணம்
மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் பணப் பையுடன் NIA அதிகாரி ஒருவர் சோதனை செய்ய நுழைந்துள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகியின் மனைவி அந்த பையில் என்ன இருக்கிறது, நீங்கள் காண்பித்தால் மட்டுமே சோதனைக்கு ஒத்துழைப்போம் எனக் கூறியதும் பையை திறந்து காண்பித்துள்ளனர். பை நிறைய பணம் இருந்துள்ளது.
என்.ஐ.ஏ. மீது புகார்
அவர்களாகவே பணத்தை கொண்டுவந்து பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகியின் வீட்டில் கைப்பற்றியதாக பொய்யாக பரப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பசிக்கு பால் வாங்கக்கூட அனுமதிக்காமல் மிக மோசமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் NIA நடந்துள்ளது RSS-ன் கைப்பாவையாக NIA செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது.
ஆர்எஸ்எஸ் தொடர்பு
கைது செய்யும் நபர்களை எங்கே அழைத்துச் செல்கிறோம் என்கிற உரிய தகவல்களைக்கூட குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல் மிரட்டும் தொனியில் காவல்துறை பதிலளித்துள்ளது. RSS மற்றும் பல இந்துத்துவ அமைப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களெல்லாம் தற்போது சுதந்திரமாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் வலம் வருகின்றனர்.
சிறுபான்மை மக்கள்
ஒருபுறம் நாட்டின் இராணுவ இரகசியங்களை பிற நாடுகளுக்கு விற்ற பல RSS பிரமூகர்கள் சுதந்திரமாக நடமாடுவதும் மறுபுறம் சிறுபான்மை மக்களும், சிறுபான்மை உரிமைக்காக போராடும் இயக்கங்களும் தொடர்ச்சியாக குறிவைக்கப்பட்டுகின்றன. தற்போதைய NIA ரெய்டு மற்றும் தலைவர்களின் கைதை இதன் நீட்சியாகவே பார்க்க முடியும்.
விடுதலை செய்ய கோரிக்கை
பாப்புலர் ஃப்ரண்ட் மீதான NIA வின் ஒடுக்குமுறையை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் பாப்புலர் ஃப்ரண்டின் மீது நிகழ்த்தப்படும் NIA வின் தொடர் அராஜகத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.
குற்றவாளிகள்
இதை காரணமாக வைத்து வன்முறையில் ஈடுபட்டு பழியை திசை திருப்பிவிடும் காரியங்களும் நடந்துவருகிறது, இதன் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது." என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.