நீட் தேர்வு: 'சமூக நீதி'யாளர் மாஜி சட்டத்துறை செயலாளர் நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்த மு.க. ஸ்டாலின்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவரும் சமூக நீதி கொள்கையில் ஆழமான பிடிப்பு உள்ளவருமான தமிழக அரசின் முன்னாள் சட்டத்துறை செயலாளரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஏ.கே. ராஜன் தலைமையிலேயே தற்போதும் நீட் தேர்வு தொடர்பான குழுவை அம்மைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தரும் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது.
2017-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு நடத்தப்படுகிறது. இந்த நீட் நுழைவுத்தேர்வால் தமிழகத்தில் கிராமப்புற, அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு காவு வாங்கப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் மருத்துவ படிப்பு கனவை பறிகொடுத்த அரியலூர் அனிதா உள்ளிட்ட பலரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.
இதனால் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தமிழகத்தின் ஒற்றை கோரிக்கை. நீட் தேர்வுகளில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதலும் தரவில்லை. இதனால் நீட் தேர்வு தமிழகத்தில் திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
தற்போதைய திமுக ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை காரணம் காட்டி பிளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வுகளை நடத்த கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். அத்துடன் நீட் தேர்வின் பாதிப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான ஒரு குழுவையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
நீதிபதி ஏ.கே. ராஜன்
முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு என்பது வெறும் ஒற்றை வரியிலான செய்தி அல்ல. நீதிபதி ஏ.கே. ராஜன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மிகவும் நம்பிக்கைக்குரியவர். தமிழக அரசின் சட்டத்துறை செயலாளராக திமுக ஆட்சியில் பணியாற்றியவர். சமூக நீதி கோட்பாடுகளில் ஆழமான நம்பிக்கை உள்ளவர்.
நீட் எதிர்ப்பாளர்
நீட் தேர்வு, தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்கிற வாதங்களில் தெளிவான சட்ட விளக்கங்களை தொடர்ந்து பொதுமக்களிடம் எடுத்து முன்வைப்பவர். 2007-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வந்த சட்டத்துக்கு உயிர்ப்பு இருக்கிறது; உச்சநீதிமன்றத்தாலும் அதை நிராகரித்துவிட முடியாது என்பது ஏன் என்பதற்கான சட்ட காரணங்களை விலாவாரியாக விளக்கக் கூடியவர்.
திறமை மீது நம்பிக்கை
சென்னை பெரியார் திடலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீதிபதி ஏ.கே. ராஜன், நான் இரண்டரை ஆண்டுகாலம் தமிழக சட்டத்துறை செயலாளராக பணியாற்றினேன். அப்போது கொண்டு வந்த எந்த சட்டத்தையும் உயர்நீதிமன்றம் செல்லாது என அறிவிக்கவும் இல்லை; உச்சநீதிமன்றமும் எந்த சட்டத்தையும் செல்லாது என அறிவிக்கவில்லை என ஆணித்தரமாக பேசியிருந்தார்.
நீட் தேர்வு விலக்கு வரும்
தற்போது அதே நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலேயே நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின், வல்லுநர் குழுவை அமைத்துள்ளார். தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கையானது நிச்சயம் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை வலிமைப்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த நடவடிக்கை மக்களிடத்தில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.