பள்ளிகளை திறக்கலாம்.. அச்சப்பட வேண்டியதில்லை.. who தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேட்டி
சென்னை : இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 68 சதவீதம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது தெரியவந்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்,
பள்ளி மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகம் ஏற்படுவதில்லை என்று கூறிய சௌமியா சுவாமிநாதன், பள்ளிகளை திறக்க வேண்டியது அவசியம் என்றார். பள்ளிக்குச் செல்வதால் தான் கொரோனா பரவுகிறது என்பது தவறான தகவலாகவும் கூறினார்.
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார்.

பள்ளி மாணவர்கள்
அப்போது பேசிய சௌமியா சுவாமிநாதன், கொரோனா காலத்திற்குப் பிறகு அறிவியல் செய்திகள் மக்களிடம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அனைத்து இதழ்களிளும் முதல் பக்க செய்தியாக அறிவியல் செய்திகள் மாறி உள்ளது. கொரோனா வைரஸ் குறித்து நமக்கு இன்னும் முழு தகவல் இல்லை. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அறிவியல் நமக்குப் பெரிதும் உதவும். பல தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. கொரோனா தொற்றின் காரணமாகப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

கிராமப்புற மாணவர்கள்
குறிப்பாகக் கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வசதி கிடைக்கப் பெறவில்லை. ஆசிரியர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதில் தமிழ்நாடு முன்மாதிரியாக இருந்தாலும், இன்னும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்

அச்சப்பட வேண்டும்
அதன்பின்னர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், "இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 68 சதவீதம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது தெரியவந்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. கடந்த ஓராண்டிற்கு முன்னர் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் முழுமையாகத் தெரியாமல் இருந்தது.

நோய் எதிர்ப்பு சக்தி
தற்போது தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. தடுப்பூசி போடும் பணி முதலில் முதியவர்களுக்குதான் ஆரம்பித்தோம். தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.பள்ளி மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகம் ஏற்படுவதில்லை.

பாதிப்பில்லை
முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை அடுத்த ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்தால், 3ஆவது அலை ஏற்படாமல் கட்டுக்குள் வைக்க முடியும். கொரோனா வைரஸ் பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இந்த வைரஸ் நோய்களுடன் தான் வாழ முடியும் என்பதால், அதை கட்டுக்குள் வைக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கொரோனாவால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மையில்லை. உலக சுகாதார நிறுவனம் பலமுறை தெரிவித்துள்ளது.

எப்படி பரவும்
18 வயதுக்குக் குறைவானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படாத நிலையிலும் அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால், அதனால் பெரிதாக பாதிப்பு இருக்காது. குழந்தைகள் பள்ளிகளை விட மால்கள் உள்ளிட்ட பிற பொது இடங்களுக்குச் செல்வதால் தான் சமுதாயப் பரவல் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர். பள்ளிக்குச் செல்வதால் தான் கொரோனா பரவுகிறது என்பது தவறான தகவலாக உள்ளது.
Recommended Video

குழந்தைகள் தடுப்பூசி
பைசர், மார்டினோ உள்ளிட்ட இரண்டு வகையான தடுப்பூசிகள் தான் உலகளவில் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 18 வயதுக்குக் கீழானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது பற்றி ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கிராமங்கள், மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இணையதள இணைப்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளதால் பள்ளிகளைத் திறக்க வேண்டியது அவசியம். ஆனால், அதை ஒரு ஆப்ஷனாக வைத்துக்கொள்ளலாம்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications