தனியார் பள்ளி விடுதியில் மதமாற்ற புகார்கள் இருந்தது உண்மையே.. ஆளுநரிடம் 85 பக்க அறிக்கை தாக்கல்
சென்னை ராயப்பேட்டையில் இயங்கி வரும் கிருத்துவ பள்ளியில், பல மாணவ- மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு என தனியாக விடுதியும் செயல்பட்டு வருகிறது.
கடந்த 6ஆம் தேதி இந்த பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நல ஆணையம் ஆய்வு நடத்தியது.
மாணவிகள் புகார்
அப்போது பள்ளியுடன் இணைக்கப்பட்ட மாணவிகள் விடுதி பதிவு செய்யாமல் இருந்தது தெரிய வந்தது. மேலும் அங்கு மாணவிகள் தங்கும் இடத்தின் சூழல் மோசமாக இருந்ததாகவும், அவர்களை கிருத்துவ மதத்தைப் பின்பற்றச் சொல்லி நிர்வாகம் வலியுறுத்துவதாகவும் மாணவிகளில் சிலர் ஆய்வு நடத்த வந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் மாணவிகளை மீட்டு, மாற்று இடத்தில் தங்க வைக்க மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்திற்கு அறிவுறுத்தினர். இருப்பினும், இதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு
இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநருக்கு தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய தலைவர் கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகள் நேற்று அந்த விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மாணவ -மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் மதமாற்றம் செய்ய அழுத்தம் எதாவது தரப்பட்டதா? என்பது குறித்து அரசு அதிகாரிகள் விசாரணை செய்ததாகத் தெரிகிறது.
மதமாற்றம் செய்யும்படி வலியுறுத்தவில்லை
அந்த விசாரணையில் பள்ளியில் மதமாற்றம் செய்யும்படி யாரையும் பள்ளி நிர்வாகம் வலியுறுத்தவில்லை என்பது தெரிய வந்தது. மாணவிகள் விடுதியில் மட்டுமே சில குறைபாடுகள் உள்ளதாகவும் அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. மேலும், பள்ளியில் கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை என்றும் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
85 பக்கங்கள் கொண்ட அறிக்கை
இது தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையத்திற்கு தமிழக அரசு அறிக்கை அளிக்க இருக்கிறது. இந்த நிலையில், மாநில குழந்தைகள் மற்றும் நல உரிமை ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் ஆகியோர் இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது 85 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் அவர்கள் ஆளுநர் ஆர் என் ரவியிடம் சமர்ப்பித்தனர்.
பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது
85 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், விடுதியில் நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்த புகாரை மனுவாக அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, விடுதியில் மாணவியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. விடுதியில் மதமாற்றம் செய்யக்கோரி மாணவிகளிடம் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. விடுதி அங்கீகாரம் இல்லாமலும் அனுமதி இன்றியும் செயல்பட்டு வருகிறது போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.