நான் எதிர்பார்த்ததை விட நல்ல ரிசல்ட் வருது! முதல்வர் துணை நிற்கிறார்! அமைச்சர் பிடிஆர் நெகிழ்ச்சி!
முதலமைச்சர் ஒரு பெரிய புரட்சி செய்திருப்பதாக அமைச்சர் பிடிஆர் புகழாரம்.
சென்னை: நிதித்துறையை சீரமைக்கும் பணிகளில் தாம் எதிர்பார்த்ததை விட நல்ல ரிசல்ட் கிடைத்து வருவதாகவும் தாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவாக இருப்பதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட அவர் அங்கு பார்வையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசும் போது இதனைக் கூறினார்.
மாநில உரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் குஜராத் முதலமைச்சராக இருந்த போது மோடி பேசியதில் 50% கூட இன்னும் தாம் பேசவில்லை எனத் தெரிவித்தார் அமைச்சர் பிடிஆர்.

நிதித்துறை
முதலமைச்சரை புகழ்ந்து பேசுவதாக நினைக்க வேண்டாம் எனக் கூறிய அமைச்சர் பிடிஆர் நிதித்துறை என்ற மிகப் பெரும் பொறுப்பை 2வது முறை சட்டமன்ற உறுப்பினரான தனக்கு வழங்கியதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார் எனத் தெரிவித்தார். மேலும், பெரும்பாலான மாநிலங்களில் முதலமைச்சர்களாக இருப்பவர்களோ அல்லது துணை முதல்வர்களாக இருப்பவர்களோ தான் நிதித்துறையை கவனித்து வருவதாகவும் அப்படியே இல்லாவிட்டாலும் கூட கட்சியில் நம்பர் 2 இடத்தில் இருப்பவர்கள் தான் நிதி இலகாவை கவனித்து வருகிறார்கள் எனவும் இதனை நிதி அமைச்சர்கள் மாநாட்டின் போது தாம் கண்கூடாக பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையை காப்பாற்றுவேன்
முதலமைச்சர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தனது செயல்திறன் அமைந்திருப்பதாக தெரிவித்தார். நிதித்துறையை சீரமைக்கும் பணிகளில் தாம் எதிர்பார்த்ததை விட நல்ல ரிசல்ட் கிடைத்து வருவதாகவும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மாற்றம் அதிகம் தெரிவதாகவும் கூறினார். மேலும், நிதித் துறை சார்ந்த நடவடிக்கைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் தமக்கு ஆதரவாக இருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

நல்ல அரசியல்வாதி
நல்ல அரசியல்வாதிக்கு 2 அடையாளங்கள் தான் அவசியம் தேவை என்று கூறிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஒன்று மனிதநேயம் மற்றொன்று பிறர் துயர் நீக்குவது என அறிவுரை வழங்கினார். தன்னை பொறுத்தவரை பிடிஆர் வீட்டுக்கு போனால் நியாயம் கிடைக்கும் என மக்கள் எண்ணத் தொடங்கியிருப்பதே தனக்கு மிகப்பெரிய மன நிறைவை தருவதாக கூறினார்.

அடக்கி வாசிக்கிறோம்
அநாவசியமாக எதிரி உருவாகக் கூடாது என்பதால் அடக்கி வாசிப்பதாகவும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் கூறிய அவர் ஆனால் எல்லாமே ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தான் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications