பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இடப்பெயர்ச்சியாவதால் யாருக்கு சாதகம்?
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து முன்கூட்டியே சசிகலா விடுதலை செய்யப்பட்டால் பெங்களூரு சிறையில் ஏதேனும் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு போனதில் இருந்தே அவர் எப்போது விடுதலையாவார் என்ற செய்திகள்தான் பல ஆண்டு காலமாக பேசப்பட்டு வருகிறது. குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிகள் நிகழ்ந்து விட்டன. அடுத்தது சசிகலா பெயர்ச்சிதான் என்ற தகவல்கள் அவரது ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது. நீதிமன்றம் விதித்த அபராத தொகையை செலுத்திய நாளில் இருந்தே சசிகலாவின் விடுதலை பற்றிய செய்திகள் அதிகம் வெளியானாலும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறையிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
முதல்வர் கனவில் இருந்த சசிகலாவின் நேரம் சரியில்லாமல் போகவே சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் சிறைக்கு போனார். சசிகலா எப்போது விடுதலையாவார் என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிறைத்துறை நிர்வாகம், அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி 27 இல் விடுதலையாவார் என்று தெரிவித்திருந்தது.
சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 10.10 கோடி அபதாரதத்தொகையும் அவரது சார்பில் சில வாரங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் விரைவில் விடுதலையாகலாம் என்ற தகவல்கள் கசிந்தன. அவர் டிசம்பர் 3இல் விடுதலை செய்யப்படுவார் என்று வாய்மொழியாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் கர்நாடக சிறை அதிகாரிகள் முன்னதாக அவர் விடுதலையாக வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சசிகலா முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவ கிரகங்கள் இடப்பெயர்ச்சி
2020ஆம் ஆண்டில் நவகிரகங்களும் இடப்பெயர்ச்சியாகிவிட்டன. ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி எல்லாமே மீன ராசிக்கு சாதகமாகவே உள்ளது. சசிகலா மீன ராசிக்காரர். இந்த கிரகங்களின் சஞ்சாரம் அவருக்கு சாதகமாகவே இருப்பதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

சசிகலாவிற்கு காத்திருப்பு
தினகரன் குடும்பத்தின் மூத்த தலைவர் சசிகலாதான், அவரது வருகைக்காக சொந்தங்கள் காத்திருக்கின்றனர். தினகரன் மகள் திருமணமும் சசிகலாவின் வருகைக்குப் பிறகே நடைபெறும் அதற்காகவே நாள் குறிக்காமல் நிச்சயம் மட்டும் செய்து வைத்திருக்கின்றனர்.

தினகரனின் முயற்சி
சத்தியமூர்த்தி என்பவர் ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் சிறைத்துறையிடம் சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த சிறைத்துறை, ஜனவரி மாதம் அவர் விடுதலை செய்யப்படுவார் என தெரிவித்தது. சசிகலா ஜனவரிக்கு முன்னதாகவே விடுதலை செய்யப்படலாம் என்றும் டிடிவி தினகரன் அதற்கான முழு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியானது.

சிறை தண்டனை முடியும் காலம்
இந்த நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சசிகலா மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. சசிகலா தரப்பு வக்கீல்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ள மனுவில், சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி 14ம் தேதி முடிகிறது. அதன்படி அவர் இன்னும் 84 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும்.

குற்றவாளி சசிகலா
இதனிடையில் சொத்து குவிப்பு வழக்கு கடந்த 1996ம் ஆண்டு தொடரப்பட்டபோது, இவ்வழக்கு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் கடந்த 1996 டிசம்பர் 7ம் தேதி சசிகலாவை கைது செய்தனர். 26 நாட்களுக்கு பின் 1997 ஜனவரி 3ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்னர் இவ்வழக்கு விசாரணையை நடத்திய பெங்களூரு தனிநீதிமன்றம் 2014 செப்டம்பர் 27ம் தேதி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியபின் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட அவர் 22 நாட்களுக்கு பின் அக்டோபர் 18ம் தேதி ஜாமீனில் விடுதலையானார்.

விடுதலையாவார் சசிகலா
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக கடந்த 1996ம் ஆண்டு 26 நாட்களும் கடந்த 2014ம் ஆண்டு 22 நாட்கள் என 48 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். தண்டனை காலத்தில் அவர் ஏற்கனவே அனுபவித்த 48 நாட்கள் சிறை தண்டனை கழிக்கப்பட்டால் இன்னும் 18 நாட்களில் சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளது.

மனுவில் கோரிக்கை
இதை அடிப்படையாக வைத்து, கர்நாடக சிறை விதிமுறைகள் படி சிறை கண்காணிபாளருக்கு முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் உள்ளதை பயன்படுத்தி இதற்கு முன் பல தண்டனை கைதிகள் விடுதலை செய்துள்ள முன்னுதாரணம் இருப்பதால், அதை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரியவருகிறது.

சசிகலா பெயர்ச்சி நிகழுமா?
சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் அவர் விடுதலையானால் எந்த மாற்றமும் வராது என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் சசிகலாவின் விடுதலைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. சசிகலா விடுதலையால் மன்னார்குடி சொந்தங்கள் வேண்டுமானால் மகிழ்ச்சியடையலாம். அதிமுகவிலோ, தமிழக அரசியலிலோ எந்த மாற்றமும் ஏற்படாது என்பதே அமைச்சர்களின் கருத்தாக உள்ளது. சசிகலா பெயர்ச்சி யாருக்கு சாதகத்தையும் யாருக்கு பாதகத்தையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications