Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதிவேந்தனுக்கு வனத்துறை தந்தது இதற்கு தானா? - எல்.முருகனை ’ஆஃப்’ செய்ய ஸ்டாலின் போடும் புது கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்றது குறித்து ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவரது கட்சிக்குள் அவருக்குப் பலத்த ஆதரவு அலை மட்டுமே வீசிவருகிறது. இதில் உதயநிதிக்குப் பதவிக் கொடுத்தது தொடர்பாக மட்டுமே அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆனால் அவரது பதவியேற்போடு சேர்த்து, நடந்த இலாகா மாற்றங்களில், கொங்கு மண்டலத்தைக் குறிவைத்து சத்தமில்லாமல் காய் நகர்த்தி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது பலரும் கவனிக்கத் தவறிய செய்தி.

உயரும் மதிவேந்தன் செல்வாக்கு:

உயரும் மதிவேந்தன் செல்வாக்கு:

மிக இளம் வயது அமைச்சரான டாக்டர் மதிவேந்தனுக்கு, முக்கியத்துவம் வாய்ந்த வனத்துறையை ஒதுக்கி இருக்கிறார் ஸ்டாலின். அதுதான் அரசியல் வட்டாரத்தில் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஏறத்தாழ 100 ஐ.எப்.எஸ். அதிகாரிகள், முதுமலை, மேகமலை, டாப் ஸ்லிப் என 21 சரணாலயங்கள், தேயிலைத் தோட்டக் கழகம், ரப்பர் தோட்டக் கழகம் என முக்கியமான பொதுத்துறை நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், பாரஸ்டர்கள், கார்டுகள், ஆயிரக்கணக்கான வேட்டைத் தடுப்புக் காவலர்கள் எனப் பிரம்மாண்டமான படை பரிவாரத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மதிவேந்தனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் மிகப்பெரிய வியூகத்தை வகுத்து இருக்கிறார் முதல் அமைச்சர் ஸ்டாலின் என்கிறார்கள் அரசியல் புரிந்தவர்கள்.

ஆர்.எம்.வீரப்பன், துரைமுருகன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பொங்கலூர் பழனிசாமி, ஆர்.வைத்திலிங்கம், ஜெயக்குமார் என அரசியலில் ஜாம்பவான்களாக இருந்தவர்கள் இதற்கு முன்னால் இந்த வனத்துறையைக் கவனித்து உள்ளனர். இப்போது புதுமுகமான மதிவேந்தனிடம் அந்தத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செல்வாக்கு மிக்க மற்றொரு அரசியல் முகம்

செல்வாக்கு மிக்க மற்றொரு அரசியல் முகம்

தனபால், வி.பி.துரைசாமி, அந்தியூர் செல்வராஜ், நாமக்கல் அருணாசலம் போன்ற அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும் செல்வாக்கான துறைகளில் மிடுக்குடன் வலம் வரவில்லை என்ற ஆதங்கம் அந்தச் சமுதாய மக்களிடம் நீண்டகால ஏக்கமாகவே இருந்து வருகிறது. இதைப் புரிந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மதிவேந்தனை, மேற்கு மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க மற்றொரு அரசியல் முகமாக மாற்ற இந்தப் புதிய அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார் என்கிறார்கள் சில அரசியல் விமர்சகர்கள்.

ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொங்கு வேளாள கவுண்டர்களுக்கு அடுத்து, கணிசமான மக்கள் தொகையில் அருந்ததியர்கள் வசிக்கின்றனர். அங்குக் கிராமம் கிராமமாகப் போய் பாஜகவை வளர்க்கும் வேலைகளில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஈடுபட்டு வருகிறார். சிறிய அளவில் செயல்படும் அருந்ததியர் சங்கங்கள், அமைப்புகளையும் வளைப்பதற்கு முருகன் தலைமையில் ஒரு டீமே வேலை பார்த்து வருகிறது. அதை முறியடிக்க வேண்டும் என்று களத்தில் இருந்து சிலர் முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாஜக மூவ்.. எல். முருகன் முயற்சி.. ஸ்டாலின் பதிலடி:

பாஜக மூவ்.. எல். முருகன் முயற்சி.. ஸ்டாலின் பதிலடி:

பாஜகவின் 'மூவ்' வை முன்னேறவிடாமல் முறியடிக்க, வனத்துறை அமைச்சர் என்ற புதிய தெம்புடன் சர்வ சுதந்திரமான அதிகாரத்தோடு கிராமம் கிராமமாகச் சென்று சைலண்டாக திமுக பக்கம் புதிய இளைஞர் பட்டாளத்தைத் திரட்ட வேண்டும் என்று மதிவேந்தனுக்கு அசைன்மென்ட் தந்திருக்கிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின்.

திமுக ஆட்சியில் அருந்ததியர் சமுதாயத்துக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகின்றன. இதனால் ஆண்டுதோறும் 900 டாக்டர்கள் படித்துவிட்டு வருகிறார்கள். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகளும் படிப்பை முடித்து, வேலைக்குப் போகத்தொடங்கி இருக்கிறார்கள். அந்த இளைஞர்களைக் கவர்வதோடு, புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி பெறும் கல்லூரி மாணவிகளையும் ஈர்ப்பதுதான் ஸ்டாலினின் மாஸ்டர் பிளான். ஆகவே விளையாட்டுப் போட்டிகள், வேலைவாய்ப்பு முகாம்கள், ஊர் திருவிழாக்கள் எனச் சகலவிதமான முயற்சிகளையும் கையில் எடுத்திருக்கிறார்கள்.

அதிமுக மற்றும் பாஜக எதிரான மாஸ்டர் ப்ளான்:

அதிமுக மற்றும் பாஜக எதிரான மாஸ்டர் ப்ளான்:

அதிமுகவின் முகமாக எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் முகமாக அண்ணாமலையும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை நிலைநிறுத்த முயன்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களைச் சார்ந்த சமூகத்தினரிடம் இவர்களுக்குக் கணிசமான செல்வாக்கு இருப்பதும் மறுக்க முடியாத உண்மை. அதே வேளையில், அதிமுக ஒரு ஜாதி கட்சியாக மாறுவதை ஏற்றுக் கொள்ள முடியாத, அந்த மாவட்டங்களில் வாழும் பல சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிமுகவிடம் இருந்து அந்நியமாகி வருகிறார்கள் என்பது களத்திலிருந்து கிடைத்துள்ள தகவல்.

கொங்கு மண்டலத்தில் சிதறிக் கிடக்கும் சிறுபான்மை சமுதாயத்தினரை வளைப்பது 2024-க்கு மட்டுமல்ல, 2026-க்கும் வலிமை சேர்க்கும் என அரசியல் நிபுணர்கள் கணிக்கிறார்கள். கொடுத்த அசைன்மெண்டை, சீனியர்களோடு சேர்ந்து எப்படிச் செயல்படுத்தப் போகிறார் என்பதில்தான் மதிவேந்தனின் அரசியல் எதிர்காலமும் இருக்கிறது என்கிறார்கள் கொக்கு வட்டாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகக் காய்களை நகர்த்தி வரும் பெரும்புள்ளிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+