கோவை அருகே வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
கோவை: கோயம்புத்தூர் அருகே வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலையை மர்ம நபர்கள் அவமதித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை, மணியம்மையார் சிலை ஆகியவை சேதப்படுத்தப்படுவதும் அவமதிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் இறுதியில் கும்மிடிப்பூண்டியில் பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள மணியம்மையார் சிலையும் அவமதிக்கப்பட்டது.
இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், வேதாரண்யம் அருகே தேத்தாக்குடியில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டபோதும், தாராபுரத்தில் தந்தை பெரியார் சிலையின் தலையில் செருப்பை வைத்தபோதும்,சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை அவமானப்படுத்தப்பட்டபோதும்கூட மனநலம் சரியில்லாத ஆசாமி செய்ததாகக் கூறி, கோப்பை (ஃபைல்) போலீசார் முடித்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவனுக்குப்' பெரியார் சிலைதான் கண்ணுக்குத் தெரியும்போல் தெரிகிறது.
கி.வீரமணி கேள்வி
கும்மிடிப்பூண்டியில் 26.12.2021 காலை முதல் இரவு வரை பி.ஜே.பி.யின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது என்பதையும், தந்தை பெரியார் சிலையருகே 'வெற்றிவேல் வீரவேல்!' என்று எழுதப்பட்ட நோட்டீசும் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதையும் காவல்துறையினர் கணக்கில் கொள்ள வேண்டும் - கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். இத்தகையவர்களைப் பின்னணியிலிருந்து இயக்குபவர்கள் யார் என்பதுதான் முக்கியம் என குறிப்பிட்டிருந்தார்.
தந்தை பெரியார் சிலை அவமதிப்பு
இந்த நிலையில் கோவை அருகே வெள்ளலூரில் நேற்று இரவு தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. வெள்ளலூரில் திராவிடர் கழகத்தின் படிப்பகம் முன்பாக பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு மர்ம நபர்கள் நேற்று இரவு செருப்பு மாலை அணித்துவிட்டு காவி நிற பொடியையும் வீசி சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம்
மேலும் பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என தி.க, திமுக உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள் வெள்ளலூர் பெரியார் சிலை அருகே திரண்டு முழக்கங்கள் எழுப்பினர். இந்த சம்பவத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் கண்டனம்
டிடிவி தினகரன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கோவை வெள்ளலூரில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்சிலை அவமரியாதை செய்யப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது.இதற்கு காரணமான சமூக விரோத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இத்தகைய சம்பவங்கள் தொடராமல் தடுக்கமுடியும். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.
திருமாவளவன் கண்டனம்
இச்சம்பவத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவன் பதிவிட்டுள்ளதாவது: கோவை மாவட்டத்தில் வெள்ளலூரில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையை அவமதித்த சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். இத்தகைய வெறுப்பு அரசியலைத் தமிழ் மண்ணில் விதைத்து வரும் சனாதன சக்திகளின் கொட்டத்தை ஒடுக்கவேண்டும். இவ்வாறு திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.