கொழும்பு டூ காங்கேசன்துறை... இலங்கையில் இந்தியாவின் நிதி உதவியுடன் புதிய ரயில் சேவை தொடக்கம்!
கொழும்பு: இலங்கையில் இந்தியாவின் நிதி உதவியுடன் புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை வரை இந்த ரயில்சேவை இயக்கப்படுகிறது.
இலங்கைக்கு சீனா அதிக அளவு கடன் கொடுத்து அந்நாட்டை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தீவிரம் காட்டுகிறது. இதுவரை சிங்களர் நிலப்பகுதியான தென்னிலங்கையில் கவனம் செலுத்தி வந்த சீனா, தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கிலும் காலூன்ற முயற்சித்து வருகிறது.
முழு ஊரடங்கு: அப்படியே சைக்கிளை எடுத்து.. 5 கி.மீ ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்.. வியந்து போன மக்கள்!
சீனாவின் பார்வை
அண்மையில் இலங்கைக்கான சீனா தூதர் யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது மீனவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் சீனா தூதர் வழங்கி இருந்தார். அத்துடன் ராமர் பாலம் எனப்படுகிற மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகளையும் அவர் ஆய்வு செய்தார். சீனாவின் இந்த நடவடிக்கைகளால் இந்தியாவின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தல் என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் உரிமையை பெற்றுத்தருவதில் இந்தியா முன்னைவிட தீவிர முனைப்பு காட்ட வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்தது.
இந்தியா நிதி உதவி
இந்த நிலையில் கொழும்பு கல்கிசையில் இருந்து யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை வரையிலான புதிய ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக இந்தியாவின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்திய இலங்கை உறவுகளில் மற்றொரு முக்கிய நிகழ்வு! டீசலில் இயங்குவதும் குளிரூட்டல் வசதிகொண்டதுமான பல்வகை ரயில் தொகுதி இந்திய கடனுதவியின்கீழ் RITES நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டநிலையில் அதன் சேவையை கௌரவ அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி அவர்கள் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
இந்திய தூதரகம்
கல்கிசை முதல் காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவையினையும் ஆரம்பித்துவைத்த கௌரவ அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி அவர்கள் இந்த ஆரம்ப ரயில் சேவையில் பயணித்த நிலையில் அமைச்சர் அவர்களை பிரதி உயர் ஸ்தானிகர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் வரவேற்றார். இலங்கை புகையிரதசேவை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு வலுவூட்டல்! வடமாகாணத்திற்கு இன்றையதினம் ஆரம்பித்துவைக்கப்பட்ட ரயில்சேவையானது, இலங்கையுடனான இந்திய அபிவிருத்தி பங்குடைமையின் முக்கிய இரு தூண்களான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நாடளாவிய அக்கறை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய தேசிய கொடி
ரயில் சேவையின் தொடக்க நிகழ்ச்சியில் ரயில் எஞ்சின் முன்பக்கத்தில் இந்தியா, இலங்கை தேசிய கொடிகள் கட்டப்பட்டிருந்தன. டீசல் ரயில் இஞ்சின், ரயில் பெட்டிகள் அனைத்தும் இந்தியாவின் நிதியால் வாங்கப்பட்டவையாகும். ரயில் சேவை தொடக்க நிகழ்வில் இலங்கை அமைச்சர் பவித்ரா வன்னி ஆராச்சி, இந்திய தூதரகத்தின் இணை தூதர் வினோத் கே.ஜேக்கப் ஆகியோர் பங்கேற்றனர்.