6-8 மணி நேர மின் தடை.. இருளில் மூழ்கிய வடமாநிலங்கள்.. குஜராத், உ.பி, ம.பியில் நிலைமை மோசம்.. பின்னணி
டெல்லி: இந்திய முழுக்க பல்வேறு மாநிலங்களில் மிக கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. ஒரு பக்கம் வெப்பநிலை உயர்ந்து உள்ள நிலையில்தான் மின்வெட்டு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 9 மாநிலங்களில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. 9 மாநிலங்களில் கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகி உள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் முதல் 37.78 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.
இந்த நிலையில்தான் கடும் வெப்பநிலைக்கு இடையே இந்தியாவில் மின்தடையும் அதிகரித்துள்ளது.
நிலக்கரி உற்பத்தி கிடுகிடு உயர்வு! ஆனாலும் பல மாநிலங்களில் மின்வெட்டு! ஏன், என்ன காரணம்? முழு விவரம்
மின்தடைக்கு என்ன காரணம்?
இந்தியாவில் மின்தடை ஏற்பட காரணம் என்று பார்த்தல், அது அதிக மின் தேவை மற்றும் குறைந்த நிலக்கரி கையிருப்பு இவைதான். இந்தியாவில் தற்போது மின்தேவை 10 சதவிகிதம் உயர்ந்து உள்ளது. அதே சமயம் தேவையான மின்சாரத்தை விட 6 சதவிகிதம் குறைவான விநியோகமே நாடு முழுக்க உள்ளது. 1.88 பில்லியன் யூனிட் மின்சாரம் தட்டுப்பாடு ஏப்ரல் மாதத்தில் முதல் 27 நாட்கள் நிலவியது.
6 வருடங்களில் மோசம்
இதனால் வடமாநிலங்களில் 6 வருடங்களில் இல்லாத மோசமான மின்தடை நிலவி வருகிறது. அதிலும் நேற்று 207111 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் இதுதான் மிக அதிகம் ஆகும். கடுமையான நிலக்கரி தட்டுப்பாடுதான் இதற்கு காரணம். வெயில் காலம் என்பதால் நிலக்கரி உற்பத்தி குறைந்துள்ளது. அதேபோல் உக்ரைன் ரஷ்ய போரால் இறக்குமதியும் பாதிக்கப்பட்டு உள்ளது. 165 அனல்மின் நிலையங்களில் மொத்தம் 56 அனல் மின் நிலையங்களில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே நிலக்கரி உள்ளது. 26 அனல்மின் நிலையங்களில் 5 சதவிகிதம் மட்டுமே நிலக்கரி உள்ளது என்றுள்ளது.
6-8 மணி நேரம்
வடஇந்தியாவில் பல மாநிலங்களில் 6-8 மணி நேரம் மின் தடை உள்ளது. குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப்பில் 6-8 மணி நேர மின் தடை நிலவி வருகிறது. ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட், ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான மின் தடை ஏற்ப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் ஆந்திரா, தெலுங்கானாவில்தான் அதிகமாக 6 மணி நேரம் வரை மின் தடை நிலவி உள்ளது.
மாநிலங்களின் நிலவரம்
டெல்லியில் மின் தேவை 6 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. ஆனால் அங்கு இருக்கும் அனல் மின் நிலையங்களில் 1 வாரத்திற்கும் குறைவான நிலக்கரியே உள்ளது. உத்தரகாண்டில் 6 மணி நேரம் மின் தடை உள்ளது. உத்தர பிரதேசத்தில் 3 ஆயிரம் மெகாவாட் மின் தட்டுப்பாடு உள்ளது. மின் தேவை 23 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. அங்கு 8 மணி நேரம் வரை மின் தடை உள்ளது.
Recommended Video
ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் 2 ஆயிரம் மெகாவாட் வரை மின் தட்டுப்பாடு உள்ளது. இங்கே 7 மணி நேரம் வரை கூட மின் தடை ஏற்படுகிறது. பீகாரில் 300 மெகாவாட் மின் தட்டுப்பாடு உள்ளது, இங்கு 4 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. பஞ்சாப்பில் மின் தடை 6-7 மணி நேரமாக உள்ளது. மின் தேவை 8 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் மின் தடை 31 சதவிகிதம் அதிகரித்து, 7 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது.