கூட்டணிக்காக அதிமுகவுடன் அந்த விஷயத்தில்.. சமரசம் செய்ய முடியாது.. வானதி சீனிவாசன் அதிரடி
டெல்லி: பாஜக-அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் கிடையாது. வர வாய்ப்பும் இல்லை. கூட்டணிக்காக கருத்தில் சமரசம் செய்ய முடியாது என்று தேசிய மகளிரணி பாஜக தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக வேல் யாத்திரை நிகழ்ச்சியை தீவிரப்படுத்தி உள்ளார். ஆனால் இதற்கு தமிழகத்தில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக அனுமதி அளிக்கவில்லை.
ஆனால் தடையை மீறி பாஜக தலைவர் எல் முருகன், உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் தடையை மீறி வேல் யாத்திரைக்கு செல்கிறார்கள். அவர்களை போலீசார் கைது செய்வது அடிக்கடி நடந்து வருகிறது. வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அண்மையில் நீதிமன்றத்திலும் அனுமதிக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
அதிமுக மீது விமர்சனம்
இதனால் அதிருப்தியில் உள்ள பாஜக, கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவை அவ்வப்போது விமர்சித்து வருகிறது. பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கும் அரசு, மற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதாக கோபத்தை வெளிப்படுத்தியது. பாஜக இந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது அதிக இடங்களில் வென்று வலுவான கட்சியாக தமிழகத்தில் பாஜகவை மாற்ற முயன்று வருகிறார்கள்.
தேசிய மகளிர் அணி தலைவர்
இந்நிலையில் தமிழக பாஜக துணை தலைவராக இருந்த வானதி சீனிவாசன், பாஜ தேசிய மகளிர் அணி தலைவராக கடந்த 28ம் தேதி நியமிக்கப்பட்டார். நேற்று காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்கு சென்றார். தொடர்ந்து தேசிய மகளிர் அணி தலைவர் அறைக்கு சென்று அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு முறைப்படி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து அவர் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மக்கள் ஆதரவு
பதவியேற்புக்கு பின் வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில். தமிழகத்தில் பாஜ வளர்ந்து வரும், மக்களின் விருப்பமான கட்சியாக இருக்கிறது. அதனால் தான் நடைபெற்று வரும் வேல் யாத்திரையில் மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. இதற்கு மாநில அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
டெல்லி தலைமை முடிவு
இப்போதுவரை பாஜக-அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் கிடையாது. வர வாய்ப்பும் இல்லை. கூட்டணிக்காக கருத்தில் சமரசம் செய்ய முடியாது. கூட்டணியில் அடுத்தடுத்து வரும் காலகட்டங்களில் டெல்லி தலைமை தான் இறுதி முடிவு செய்யும். தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதே பாஜகவின் லட்சியம்" இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.