இதுதான் இந்திய ராணுவம்.. பிஎஸ்எப் வீரரை திருமணத்திற்கு அனுப்ப தனி ஹெலிகாப்டர்.. அசத்தல்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் மச்சில் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு திருமணத்துக்காக அனுப்பி வைத்தனர். அவர் பணியாற்றும் பகுதியில் பனிப்பொழிவு, சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் எல்லை பாதுகாப்பு படை சார்பில் ஹெலிகாப்டர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
இந்தியாவை பிற நாடுகளுடன் இருந்து பிரிக்கும் எல்லை பகுதிகளில் பிஎஸ்எப் எனும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பணிசெய்யும் எல்லை பாதுகாப்பு படை வீரர் திருமணத்துக்கு செல்ல வசதியாக ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டது. அதுபற்றிய விபரம் வருமாறு:

ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் வீரர்
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள ஆதிபூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயண பெஹெரா (வயது 30). இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள மச்சில் செக்டாரில் ரிமோட் ஏரியாவில் இவர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கும் பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயத்தார்த்தம் நடந்தது. நிச்சயத்தார்த்தத்துக்கு பின் மீண்டும் அவர் பணிக்கு திரும்பினார். இந்நிலையிலல் இவரது திருமணம் மே மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது.

ஊர் திரும்புவதில் சிக்கல்
இதனால் அவர் விடுமுறை கேட்டிருந்தார். இதற்கு உயரதிகாரிகள் ஒப்புதல் வழங்கினர். இவர் ஊர் திரும்ப தயாராகி வந்தார். இந்நிலையில் தான் அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. மேலும் அவர் பணியாற்றும் பகுதிக்கான சாலை போக்குவரத்தும் வசதியும் துண்டிக்கப்பட்டது. இதனால் குறித்த நேரத்தில் அவர் ஊர் திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது.

ஹெலிகாப்டரில் மீட்பு
இதனால் தனது மகனுக்கு சிறப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என நாராயண பெஹெராவின் பெற்றோர் உயர் அதிகாரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் நாராயண பெஹெராவை ஹெலிகாப்டர் மூலம் மீட்க முடிவு செய்தனர். அதன்படி ஹெலிகாப்டர் மூலம் நேற்று காலை மீட்கப்பட்டார்.

அதிகாரிகள் கூறுவது என்ன
இதுபற்றி எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛மே மாதம் 2ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பனிமூட்டம் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்குடனான சாலை போக்குவரத்து துண்டிப்பு ஆகிய காரணங்களால் ஹெலிகாப்டர் மூலம் அவர் அழைத்து வரப்பட்டுள்ளார். சமீபத்தில் அவரது பெற்றோர் தளபதியை தொடர்பு கொண்டு மகனை திருமணத்துக்கு அனுப்ப வலியுறுத்தினர். தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளதால் அவரது பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்'' என்றார். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (காஷ்மீர் எல்லை) ராஜா பாபு சிங் கூறுகையில், ‛‛வீரர்களின் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சி என்பது மிகவும் முக்கியம். இதனால் தான் ஹெலிகாப்டர் மூலம் அவர் ஸ்ரீநகருக்கு அழைத்து வரப்பட்டு சொந்தஊர் அனுப்பி வைத்தோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications