அச்சாணி கழன்ற வண்டியாக காங்....6 மாநிலங்களில் உச்சத்தில் உட்கட்சி மோதல்- தடுமாறும் சோனியா குடும்பம்
டெல்லி: ராஜஸ்தான், பஞ்சாப், அஸ்ஸாம், கேரளா, ஜார்க்கண்ட், குஜராத் என 6 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. ஆண்டுகணக்கில் நீடிக்கும் இந்த குழப்பங்களுக்கு தீர்வு காண முடியாமல் டெல்லி காங்கிரஸ் மேலிடம் கையறு நிலையில் இருப்பது அக்கட்சியினரை கவலையும் அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது.
2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
இதன்பின்னர் காங்கிரஸின் இடைக்கால தலைவரானார் சோனியா. இன்றளவும் இடைக்கால தலைவராகவே சோனியா இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கான வலிமையான தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திண்டாடுகிறது காங்கிரஸ்.
சோனியா குடும்பம் திணறல்
இந்த நிலையில் நாலா திசைகளிலும் பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் உச்சகட்ட மோதல்கள் தொடருகின்றன. இந்த பஞ்சாயத்துகளுக்கு தீர்வு காணப்படாத நிலையில் மூத்த தலைவர்கள் பாஜகவுக்கு தாவுவது தொடர்கிறது. இந்த விவகாரங்களுக்கு தீர்வு காண முடியாமல் காங்கிரஸ் மேலிடம் அதாவது சோனியா குடும்பம் திணறிக் கொண்டிருக்கிறது.
அமரீந்தர்சிங் - சித்து
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் டெல்லியில் முகாமிட்டு சோனியா காந்தி குடும்பத்துடன் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக விவாதித்தார். நவ்ஜோத்சிங் சித்துவை அமைச்சரவையில் சேர்த்தாக வேண்டும் என்கிறது சோனியா குடும்பம். ஆனால் அவரை மட்டும் அமைச்சரவையில் சேர்க்கவே முடியாது என அடம்பிடிக்கிறார் அமரீந்தர்சிங். அவரைப் பொறுத்தவரையில் சித்துவுக்கு துணை முதல்வர் பதவியும் தரக் கூடாது; பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியும் தரக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.
அசோக் கெலாட்- சச்சின் பைலட்
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு கடந்த ஓராண்டாகவே சிக்கல்தான். முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி தூக்கினர். பின்னர் சோனியா குடும்பம் மொத்தமாக தலையிட்டு சமாதானப்படுத்தியது. ஆனால் ஓராண்டாகியும் சச்சின் பைலட் கோஷ்டிக்கு கொடுத்த வாக்குறுதி எதனையும் நிறைவேற்றவில்லை. அத்துடன் கட்சி தாவி வந்த பகுஜன் எம்.எல்.ஏக்களுக்கு அளித்த வாக்குறுதிகளும் காற்றில் பறந்தன. இதனால் அசோக் கெலாட் அரசு கவிழ்வது மட்டுமல்ல.. சச்சின் பைலட் எந்த நேரத்திலும் பாஜகவுக்கு போவார் என்கிற அச்சம் காங்கிரஸ் கட்சியில் நிலவுகிறது.
ரமேஷ் சென்னிதாலா- உம்மன் சாண்டி
கேரளாவில் சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சென்னிதாலா, காங்கிரஸ் மேலிடம் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். 2-வது முறையாக தமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி மறுக்கப்பட்டதுதான் இதற்கு காரணமாம். இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமையன்று ராகுல் காந்தியை சந்தித்தார் சென்னிதாலா. ஆனால் காங்கிரஸ் மேலிடமோ, கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்காமல் போனதற்கு சென்னிதாலா- உம்மன் சாண்டி ஆகியோரது கோஷ்டிகளுக்கு இடையேயான பூசல்கள் ஒரு காரணம்; இதில் சென்னிதாலா கோஷ்டிதான் முக்கிய காரணம் என்கிற கோபத்தில் இருக்கிறதாம்.
டெல்லி ஆதிக்கம்
அஸ்ஸாமைப் பொறுத்தவரையில் தற்போதைய பாஜக என்பது மாஜி காங்கிரஸ் கட்சிக்காரர்களால் நிறைந்த கட்சிதான். சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு தேயிலை தோட்ட பழங்குடிகள் தலைவரும் 4 முறை எம்.எல்.ஏ.வாக வென்றவருமான ருப்ஜோதி குர்மி தற்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அத்துடன் பாஜகவிலும் ஐக்கியமாகிவிட்டார். அவரைத் தொடர்ந்து மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுக்கு தாவப் போகிறார்களாம். அஸ்ஸாம் மாநில தலைவர்களை கலந்து ஆலோசிக்காமலேயே சோனியா குடும்பம் தன்னிச்சையாக டெல்லி தலைவர்களின் பேச்சை கேட்டு செயல்படுகிறது என்பது அஸ்ஸாம் காங். அதிருப்தியாளர்களின் கோபத்துக்கு காரணம்.
ஹேமந்த் சோரன் மீது அதிருப்தி
ஜார்க்கன்ட் மாநிலத்தில் ஜே.எம்.எம்.- காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. ஆனால் முக்கிய முடிவுகளை காங்கிரஸ் கட்சியுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாகவே எடுத்துவிடுகிறார் முதல்வர் ஹேமந்த் சோரன் என்கிற புகார் டெல்லியில் வாசிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பாகிப் போன சோனியா குடும்பம், ஹேமந்த் சோரன் சந்திக்க முயன்ற போதும் நிராகரித்து வெறுங்கையுடன் ராஞ்சிக்கு திருப்பி அனுப்பிவிட்டது. இதனால் ஜார்க்கண்ட் மாநில கூட்டணி அரசு நீடிக்குமா? என்கிற கேள்வி இயல்பாகவே எழுந்தது.
காங். எதிர்காலம் என்னவாகும்?
இப்படி ஒவ்வொரு மாநில பிரச்சனைகளும் தலைக்கு மேலே வெள்ளம் போல போய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு மாநில பிரச்சனைக்கும் ஆக்கப்பூர்வமான தீர்வை சோனியா குடும்பத்தால் வைக்க முடியவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி பெயரளவுக்குதான் சோனியா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது; உண்மையில் காங்கிரஸில் இப்போது தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்கிற நிலையில்தான் உள்ளனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதே நிலைமை நீடித்தால் அடுத்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்க சீட்டுகள்தான் நிச்சயம் கிடைக்கும் என்பதும் அவர்களது கருத்து.