பக்கா பிளான்! கச்சிதமாக சரிந்த நொய்டா இரட்டை கோபுரங்கள்! இடிபாடுகளில் கொஞ்சம் கூட வெளிய போகல! எப்படி
டெல்லி: நொய்டா இரட்டை கோபுரம் திட்டமிட்டபடி கச்சிதமாக இடித்துத் தகர்க்கப்பட்டதாக வல்லுநர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
நாட்டின் மிகப் பெரிய கட்டிடங்களில் ஒன்றான இந்த இரட்டை கோபுரங்கள் குதூப் மினாரை விட உயரமானதாகும். இருப்பினும், இது சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டு உள்ளதாகப் புகார்கள் எழுந்தன.
சூப்பர்டெக் என்ற நிறுவனம் கட்டிய இந்த இரட்டை கோபுரம் கட்டுப்படும் போதே, அதன் வரைபடத்துக்கும் கட்டுமானத்திற்கும் வேறுபாடுகள் இருந்தன.
டெல்லி நொய்டா சட்டவிரோத இரட்டை கோபுரம்..328 அடி உயர கட்டிடம்- 9 நொடிகளில் தகர்ந்தது!
உத்தரவு
இது தொடர்பாகக் குடியிருப்போர் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில் கட்டிடத்தை இடிக்க 2014இல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து கட்டுமான நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து கட்டுமானத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இடிப்பு
அதன்படி இன்று கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக வெறும் 9 நொடிகளில் தரைமட்டமானது. கட்டிகளைத் தகர்ப்பு காரணமாக அங்கு விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும், சுற்றியிருக்கும் கட்டிடங்களில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு இருந்தனர். இந்தச் சூழலில் கட்டிடம் வெடி வைத்து பத்திரமாகத் தகர்க்கப்பட்டது.
வல்லுநர்கள்
மும்பையைச் சேர்ந்த எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவனம், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜெட் டெமாலிஷனின் நிபுணர்களின் உதவியுடன் இந்த இடிப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக ஆங்கில செய்தி ஊடகத்தில் பேசிய தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வல்லுநர் ஜோ, "பாதுகாப்பான முறையில் இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்பட்டு உள்ளது.
பக்கா பிளான்
இந்த அளவிலான கட்டிடங்களை வைத்திருப்பது சவாலானது. தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் இதை விடப் பெரிய கட்டிடங்களை தகர்ந்து இருந்தோம். இப்போது இங்கும் திட்டமிட்டபடி கட்டித்தை தகர்த்து இருக்கிறோம். வெடிப்பை வடிவமைத்து அதற்குத் தேவையான தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள நாங்கள் நிறைய நேரம் செலவிட்டோம். இதன் காரணமாகவே எவ்வித தவறும் இல்லாமல் கட்டிடம் தகர்க்கப்பட்டது.
பாதிப்பு இருக்காது
அருகில் உள்ள கட்டிடங்களுக்கு அல்லது நிலத்தில் பதிக்கப்பட்டு இருக்கும் குழாய்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் கட்டிடம் பாதுகாப்பாக இடிக்கப்பட்டு உள்ளது" என்றார். முன்னதாக, இரட்டை கோபுரம் அருகே வசிப்பவர்கள் குண்டுவெடிப்பு குறித்து அச்சம் தெரிவித்தனர். அதாவது வெடிப்பு காரணமாக எங்கு தங்கள் குடியிருப்புகள் பாதிக்கப்படுமோ என்று அச்சம் தெரிவித்தனர்.
இடிபாடுகள்
இது குறித்து வல்லுநர் கெவின் கூறுகையில், "கட்டிடத்தின் இடிபாடுகள் வெளியே எங்கும் பறந்துவிடாது. இதற்காகக் கட்டிடங்களில் தடுப்புகளை வைத்துள்ளோம். மேலும், கட்டிடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பை வைத்துள்ளோம். கட்டிடத்தின் சில இடிபாட்டுக் குப்பைகள் தரையில் இருக்கும்.. ஆனால் வெடிமருந்துகளின் பாகங்கள் எங்கும் பறக்காது. இவை அனைத்தும் கட்டிடம் இருக்கும் இடத்திற்குள் தான் விழும்" என்றார்.