டெல்லியை சுட்டெரித்த சூரியன்...90 ஆண்டுகளுக்கு பின் ஜூலையில் 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
டெல்லியில் பருவமழை தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 43.5 டிகிரி செல்சியஸ் ஆக உயா்ந்தது. இது கடந்த 90 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான வெப்பமாகும்.
டெல்லி: தலைநகர் டெல்லியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது கடந்த 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூலை மாதத்தில் பதிவான வெப்பமாகும்.
மே மாதத்தில் அக்னி நட்சத்திர காலத்தில்தான் பொதுவாக அனல் காற்று வீசும். ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி விடும். ஜூன் இறுதியில் டெல்லியில் பருவமழை காலமாகும்.
டெல்லியில் கடந்த வாரமே பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை சின்ன தூரல் கூட விழுவதற்கான அறிகுறிகள் இன்னமும் தென்படவில்லை.
வெப்பநிலை அறிக்கை : ஏப்.2 முதல் 18 மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியல் வெப்பநிலை உயரும்
கடும் வெயிலால் பாதிப்பு
டெல்லியின் பல பகுதிகளில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. நடு சாலையில் முட்டை ஊற்றி ஆம்லேட் போடும் அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. 43.5 டிகிரி செல்சியஸ் அதாவது பாரன்ஹீட் அளவில் 110.3 டிகிரி பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டு இதுவரை பதிவானதில் மிக உயா்ந்ததாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
76 ஆண்டுகளில் அதிக வெயில்
தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் மாதம் அதிகபட்ச வெப்பநிலை 104.18 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கடந்த 1945ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி 104.7 டிகிரி வெயில் பதிவானது. அதன்பிறகு கடந்த 76 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் டெல்லியில் இவ்வளவு அதிகமான வெயில் பதிவானது இதுவே முதல்முறை என்று வானிலை மையம் தெரிவித்தது.
ஜூலையில் அதிக வெப்பம்
டெல்லியில் ஜூலை 1ஆம் தேதியன்று 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. ஜூலை மாதத்தில் கடந்த 90 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். இதற்கிடையே பருவமழை வருவதற்கு இன்னும் ஒரு வாரமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு அனல்
இதனிடையே வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டெல்லி, வட ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயில் அதிகரிக்க காரணம்
பாகிஸ்தானில் இருந்து வடமேற்கு இந்தியாவுக்கு குறைந்த மட்டத்தில் வீசும் வறண்ட மேற்கு தென்மேற்கு காற்று காரணமாக, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி, வடக்கு ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் வடமேற்கு மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலைகள் வீச வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.