அந்த நாள் ஞாபகம் வந்ததே.. நண்பனே.. நண்பனே...டெல்லியில் சரத் யாதவை ஆரத் தழுவி அரவணைத்த நிதிஷ்குமார்
டெல்லி: டெல்லியில் முகாமிட்டிருக்கும் பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார், மூத்த அரசியல் தலைவரும் தமது முன்னாள் சகாவுமான சரத்யாதவை சந்தித்து பேசினார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) மூத்த தலைவராக இருந்தவர் சரத்யாதவ். ஜேடியூ- பாஜக இடையே நிதிஷ்குமார் கூட்டணி அமைத்ததை கடுமையாக எதிர்த்தவர் சரத் யாதவ். இதனால் நிதிஷ்குமார், சரத் யாதவ் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் சரத் யாதவின் எம்பி பதவியையும் பறித்தார் நிதிஷ்குமார். பின்னர் ஜேடியூவில் இருந்து வெளியேற்றப்பட்டார் சரத் யாதவ்.
இந்தியா- வங்கதேச உறவு அடுத்த 25 ஆண்டுகளில் புதிய உச்சத்தைத் தொடும்: பிரதமர் மோடி நம்பிக்கை
ஆர்ஜேடியில் சரத் யாதவ்
ஜேடியூவை விட்டு வெளியேறிய சரத் யாதவ், லோக் தந்திரிக் ஜனதா தள் கட்சியை தொடங்கினார். இந்த கட்சியை அண்மையில்தான் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியுடன் அவர் இணைத்தார். இந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார், ஆர்ஜேடி-காங்கிரஸ் ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைத்து மீண்டும் முதல்வரானார் நிதிஷ்குமார்.
டெல்லியில் நிதிஷ்குமார்
இதனைத் தொடர்ந்து டெல்லி சென்றுள்ள நிதிஷ்குமார் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த சந்திப்புகளை நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்தான் டெல்லியில் முதலில் ராகுல் காந்தியை சந்தித்தார். பின்னர் தமது மாஜி சகாவான சரத்யாதவையும் நிதிஷ்குமார் சந்தித்தார். இச்சந்திப்பின் போது சரத் யாதவை நிதிஷ்குமார் ஆரத் தழுவிக் கொண்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரத் யாதவ், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டிய தருணம் இது. எதிர்க்கட்சிகளின் முகமாக நிதிஷ்குமாரைத் தவிர வேறு யாரும் இல்லை என்றார்.
டெல்லி பரபர சந்திப்புகள்
முன்னதாக சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் நிதிஷ்குமார் சந்தித்தார். அதேபோல் இந்திய தேசிய லோக் தள் கட்சித் தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலாவையும் நிதிஷ்குமார் சந்தித்தார்.
ஹரியானா பேரணி
இதனிடையே செப்டம்பர் 25-ந் தேதி ஓம்பிரகாஷ் சவுதாலாவின் இந்திஅய் தேசிய லோக் தள் கட்சி ஹரியானாவில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளது. இந்த பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் ஹரியானா பேரணியில் பங்கேற்க உள்ளனர்.