அதிமுக அதிரடியால்.. காங்கிரஸுக்கு அடித்தது எதிர்பாராத ஜாக்பாட்.. சர்ருன்னு நம்பரை ஏற்றிய திமுக
-கோயா
டெல்லி: பறவை உட்கார பனம் பழம் விழுந்த கதைதான் இது. பாமகவுக்கு அதிமுக 7 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதால் காங்கிரஸ் கட்சி கொள்ளை லாபத்தை சந்தித்துள்ளதாம். அதாவது அவர்களுக்கான சீட்டை திமுக சர்ரென உயர்த்தி விட்டதாம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி டீல்களை வேக வேகமாக முடித்து வருகின்றன. பாஜக மற்றும் பாமகவுடன் அதிமுக கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில், திமுக அதன் தோழமை கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடிப்பதற்கான பணிகளை தீவிரமாக்கியுள்ளது.
இந்த நிலையில் அதிமுக பாமக இடையே ஏற்பட்ட டீலால், காங்கிரஸுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. எப்படி என்றால், பாமகவுக்கே இத்தனை சீட் என்றால் நாங்கள் தேசியக் கட்சி, அதுவும் தமிழகம் முழுக்க பரந்து விரிந்துள்ள கட்சி. எனவே கண்டிப்பாக கூடுதல் சீட் தேவை என்று திமுகவிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.
10 சீட்
இதையடுத்து கடந்த 4 நாட்களாக டெல்லியில் வைத்து கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்த திமுக, காங்கிரசுக்கு ஒரு வழியாக 10 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. உண்மையில் சிங்கிள் டிஜிட்டில்தான் காங்கிரஸுக்கு சீட் ஒதுக்கி வைத்திருந்தார் ஸ்டாலின்.
இறங்கி வந்த ஸ்டாலின்
12 சீட் கேட்டு காங்கிரஸ் டிமாண்ட் செய்த நிலையில் 8 சீட் மட்டுமே அளிக்க திமுக திட்டமிட்டிருந்தது. இதனிடையே பாமகவுக்கு அதிமுகவில் 7 சீட் ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட் அளிக்கப்பட்டதால் மு.க.ஸ்டாலின் தனது முடிவில் இருந்து சற்று இறங்கி வந்தாராம்.
பாமகவுக்கே 8
மாநில கட்சி அதுவும் வடமாவட்டங்களில் மட்டுமே வாக்குவங்கி கொண்டுள்ள பாமகவுக்கே இ.பி.எஸ். 7 சீட் கொடுக்கும் போது, காங்கிரசுக்கு 8 சீட் என்பது போதாது தமிழக காங்.மேலிட பொறுப்பாளர்கள் திமுகவிடம் எடுத்துச்சொன்னார்களாம். இதையடுத்து சரி 10 ஓ.கே.என ஸ்டாலின் தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை இனிதே முடிந்ததாம்.
எட்டப்பட்ட சுமூக முடிவு
ஏற்கனவே காங்கிரஸ் விருப்ப தொகுதிகளின் பட்டியல் திமுகவிடம் உள்ளதால், நாளை கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வைபவம் அறிவாலயத்தில் நடக்க உள்ளதாம். அதைத்தொடர்ந்து வி.சி.க, மதிமுக, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளுடனும் இந்த வார இறுதிக்குள் கூட்டணி பார்மாலிட்டிகளை திமுக முடிக்கிறதாம்.