உலக பொருளாதாரம் சரிந்தாலும் இந்திய பெரும் பணக்காரர்களுக்கு பாதிப்பே கிடையாதாம்.. வெளியான பரபர சர்வே
டெல்லி: இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் என அண்டை நாடுகளில் பொருளாதாரம் வீழ்ந்துள்ள நிலையில், அந்நாடுகள் செய்வதறியாது தினறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் குறித்தும் பொருளாதார அறிஞர்கள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
ஆனால் மறுபுறத்தில் பணக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
செம சாதனை! உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறிய இந்தியா! பிரிட்டனை பின்னுக்கு தள்ளி அசத்தல்
'ஆக்ஸ்பாம்' அறிக்கை
கடந்த ஜனவரியில் இது குறித்து மிக முக்கிய ஆய்வை ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பணக்காரர்களின் நிலை குறித்தும் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 50வது ஆண்டுக் கூட்டத்திற்கு முன்னதாக 'Time to Care' என்ற ஆய்வறிக்கையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, "உலக மக்கள்தொகையில் 60 சதவீதமாக இருக்கும் 460 கோடி மக்களின் சொத்தை விட, உலகில் உள்ள வெறும் 2,153 பணக்காரர்களிடம்/கோடிஸ்வரர்களிடம் உள்ள சொத்தின் மதிப்பு அதிகமாகும். இது உலகம் முழுவதும் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வை விவரிக்கிறது.
இந்தியாவின் நிலை
சரி இப்போது இந்தியாவின் நிலைமைக்கு வருவோம். நம் அன்றாட வாழ்க்கையில் பைக் வாங்க வேண்டும் என்றாலோ, அல்லது ஒரு நகை எடுக்க வேண்டும் என்றாலோ அது உடனடியாக சாத்தியப்படுவதில்லை. குறைந்தபட்சம் 6 முதல் ஓராண்டு சேமிப்பு அவசியமாகிறது. ஆனால், இதே இந்தியாவில் உள்ள 95.3 கோடி மக்களிடம் இருக்கும் சொத்தின் அளவை விட நாட்டு மக்கள் தொகையில் வெறும் 1 சதவிகிதம் மட்டுமே உள்ள பணக்காரர்களிடம் உள்ள சொத்தின் மதிப்பு மிகவும் அதிகமாகும்.
கல்வி கூட விடுபடவில்லை
இதை இன்னும் எளிதாக புரிந்துகொள்வதெனில் இந்தியாவில் ஆண்டு தோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது அல்லவா? அதைவிட அதிகமான சொத்தை இந்த பணக்காரர்கள் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவுதும் உள்ள மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளனர். அவர்களின் வேலை பறிபோயுள்ளது. இதன் காரணமாக அவர்களின் வருவாய் முற்றிலுமாக இழக்கப்பட்டுள்ளது. இது அவரின் அடுத்த தலைமுறையினரின் கல்வி உள்ளிட்ட அடிப்படைகளையும் பாதித்திருக்கிறது.
வெற்று வாக்குறுதி வேஸ்ட்
ஆனால் இருந்தபோதிலும், இந்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. இந்த அசமத்துவ நிலையை ஒழிக்காமல் வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் சுகாதாரம், வீடு என பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லையென பொருளாதார அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
"சரி இதெல்லாம் 2020 புள்ளிவிரமுங்க. தற்போதைய டேட்டாவை எடுத்து பாருங்க என" சொல்பவறா நீங்கள்? சரி உங்களுக்காக இந்த ஆண்டு ஆக்ஸ்பாம் வெளியிட்ட புள்ளிவிவரத்தையும் கொடுக்கிறேன். அதாவது நாட்டின் 84 சதவிகித குடும்பங்கள் தங்கள் வருவாயை பெருமளவு இழந்திருக்கின்ற நிலையில், இந்திய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கையானது 102 லிருந்து 142 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் இந்தியாவின் 100 பெரும் பணக்காரர்களின் கூட்டுச் சொத்து மதிப்பு 57.3 லட்சம் கோடி ரூபாய். இந்தியாவின் 2022ம் ஆண்டின் பட்ஜெட் தொகை 39.45 லட்சம் கோடி ரூபாய்.
புதிய பணக்காரர்கள்/ஏழைகள்
இந்த அசமத்துவம் ஏற்படுத்தும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. உலகம் முழுவதும் போதுமான பணம் இல்லாமல் ஒவ்வொரு நான்கு விநாடிகளுக்கும் ஒருவர் உயிரிழக்கிறார். இந்தியாவில், தொற்றுநோய் காலத்தில் (மார்ச் 2020 முதல், நவம்பர் 30, 2021 வரை) கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடி ரூபாயிலிருந்து (313 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ரூ.53.16 லட்சம் கோடியாக (USD 719 பில்லியன்) அதிகரித்துள்ளது. இதற்கிடையில், 4.6 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் 2020 ஆம் ஆண்டில் தீவிர வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
மறைமுக வரி
இவர்களின் சொத்துக்கள் உயர்ந்தது குறித்து பார்த்தாகிவிட்டது. தற்போது இது எப்படி உயர்ந்தது என்பது குறித்து பார்ப்போம். இந்தியாவை பொறுத்த அளவில் மறைமுக வரிகள்தான் அரசின் முக்கிய வருவாய். அதாவது, 2000 ஆம் ஆண்டில் மொத்த வரி வருவாயில் மறைமுக வரியின் சதவீதம் 63.69 சதவீதமாக இருந்தது. இது காலப்போக்கில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அட மறைமுக வரின்னா வேறொன்னும் இல்லீங்க. நாம வாங்குற தீப்பெட்டியிலிருந்து, மது வரை நாம் செலுத்தும் வரிதான் அது.
நேர்முக வரி
ஆனால் இந்த காலங்களில் நேர்முக வரி குறைந்(த்)திருக்கிறது. நேரடி வரி என்றால் மேற்குறிப்பிட்ட பணக்காரர்களிடமிருந்து பெறப்படும் வரியாகும். இது கார்ப்ரேட் வரி என அழைக்கப்படுகிறது. பள்ளிக் கல்வி, உலகளாவிய சுகாதாரம் மற்றும் மகப்பேறு விடுப்பு, ஊதிய விடுப்பு மற்றும் அனைத்து இந்தியர்களுக்கான ஓய்வூதியம் போன்றவை அனைத்து இந்தியர்களுக்கும் முழுமையா கிடைக்க வேண்டும் எனில் இந்த கார்ப்ரேட் வரி விகிதம் உயர்த்தப்பட வேண்டும்.
பொருளாதாரத்தில் தாக்கம்
ஆனால் அரசுகள் செய்து என்ன தெரியுமா? இந்த வரி விகிதத்தை குறைத்ததுதான். இந்த குறைப்பு கடந்த 4 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்த கார்ப்ரேட் வரி 30லிருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இதனால் 1.5 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே கடந்த 2016ல் பெரும் பணக்காரர்களுக்கான சொத்து ரத்து செய்யப்பட்டது. இது இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆக்க இந்த நடவடிக்கை உதவியது.
ப்ளூம்பெர்க் இன்டெக்ஸ் தரவுகள் படி கௌதம் அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் உய்ட்டன் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.