விடுதலைப் புலிகள், தமிழ்நாடு விடுதலைப் படை வரிசையில் 43-வது இயக்கமாக தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ.
டெல்லி: இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்நாடு விடுதலைப் படை வரிசையில் 43-வது இயக்கமாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
நாடு விடுதலை அடைந்த காலத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகள் படுகொலைக்கு காரணமான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தடை செய்யப்பட்டது. பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீதான தடை நீக்கப்பட்டது.
நாட்டில் தற்போதைய நிலையில் மொத்தம் 42 இயக்கங்கள், அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
பயங்கரவாத தொடர்பு..பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இணையதளம் முடக்கம்..மத்திய அரசு அதிரடி
காலிஸ்தான் தனிநாடு
பப்பர் கல்சா சர்வதேச அமைப்பு, காலிஸ்தான் கமாண்டோ போர்ஸ், காலிஸ்தான் ஜிந்தாபாத் போர்ஸ், சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, காலிஸ்தான் லிபரேசன் போர்ஸ் ஆகியவை சீக்கியர்களுக்கு தனிநாடு - காலிஸ்தான் கோருகிற அமைப்புகள். இந்தியாவுக்கு எதிராக காலிஸ்தான் கோரிக்கையை முன்வைத்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவை இந்த இயக்கங்கள். லஷ்கர் இ தொய்பா, ஜெய்-ஷ்-இ- முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன், சிமி உள்ளிட்ட பல இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
வடகிழக்கு இயக்கங்கள்
வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு தேசிய இனக் குழுக்கள் ஆயுதக் குழுக்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த ஆயுதக் குழுக்கள் தனிநாடு கோருதல், தனி மாநிலம் கோருதல், சுயாட்சி கவுன்சில் அமைக்க கோருதல் ஆகியவற்றை கொள்கைகளாகக் கொண்டவை. ஆகையால் மத்திய அரசால் இந்த இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. இதில் உல்பா, மக்கள் விடுதலை ராணுவம், திரிபுரா புலிகள் ராணுவம் உள்ளிட்டவை அடங்கும்.
இடதுசாரிகள்
இடதுசாரி புரட்சி மூலம் இந்தியாவின் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்கிற கோட்பாட்டுடன் ஆயுதப் புரட்சி நடத்தும் சிபிஐ(எம்.எல்), மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் (எம்.சி.சி), சிபிஐ (மாவோயிஸ்ட்) ஆகியவையும் அவற்றின் பல்வேறு முன்னணி அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு விடுதலை, தமிழீழ விடுதலைப் புலிகள்
இந்தியாவில் இருந்து தமிழ்நாடு தனிநாடாக விடுதலை பெற வேண்டும் என்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்புகள் தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ்நாடு மீட்சிப் படை. தமிழ்நாடு விடுதலைப் படை தொடக்கத்தில் தமிழரசன் தலைமையில் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டது. பின்னர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் வீரப்பனுடன் இணைந்து தமிழ்நாடு விடுதலைப் படை செயல்பட்டது. தமிழ்நாடு மீட்சிப் படைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் பயிற்சி கொடுத்தனர். இந்த 2 ஆயுதக் குழுக்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கையில் தமிழர் வாழும் வடகிழக்கு பகுதியையும் தமிழ்நாட்டையும் இணைத்து அகன்ற தமிழ்நாடு அமைக்க முயன்றது, ராஜீவ் காந்தி படுகொலை உள்ளிட்டவைகளாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா
இப்பட்டியலில்தான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவும் இணைக்கப்பட்டுள்ளது. பிஎப்ஐ இயக்கத்துடன் சேர்த்து நமது நாட்டில் மொத்தம் 43 இயக்கங்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. பிஎப்ஐ மற்றும் அதன் முன்னணி இயக்கங்களுக்கு மத்திய அரசு இன்று தடை விதித்தது. இத்தடை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும்.