பிடிங்க.. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் லிஸ்ட்! இப்போ என்ன சொல்வீங்க? ராகுல் காந்தி கேள்வி
டெல்லி: போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குறித்த டேட்டா இல்லை என்று மத்திய அரசு கூறிய நிலையில், விவசாயிகளின் விவரம் தன்னிடம் இருப்பதாக கூறி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் கூறியதாவது:
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசு உண்மையை மூடி மறைக்கிறது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
ஓமிக்ரான்: தமிழகத்தில் ஆரம்பித்த கட்டுப்பாடு! தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுரையில் 18 இடங்களில் தடை
ராகுல் காந்தி பேட்டி
உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக எந்த தரவுகளும் இல்லை என்கிறது மத்திய அரசு. வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 700 பேர் உயிரிழந்தனர். ஆனால், உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை என மத்திய அரசு சொல்கிறது.
பொய் சொல்கிறது
நிவாரணம் வழங்க விரும்பாததால், மத்திய அரசு பொய் சொல்கிறது. பணக்காரர்களுக்கு ஆதரவான அரசாக மத்திய அரசு உள்ளது.
விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்குமா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் இது குறித்து அரசிடம் எந்தப் பதிவும் இல்லை, எனவே இந்தக் கேள்வி எழவில்லை என்று விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
500 பேர் பட்டியல்
எனவே நாங்கள் இதை கண்டுபிடிக்க வேலை செய்தோம். எங்களிடம் 500 பேரின் பெயர்கள் உள்ளன, அவர்கள் குடும்பத்தினருக்கு பஞ்சாப் அரசு இழப்பீடு மற்றும் வேலை வழங்கியது. பஞ்சாப் அரசு அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடும், 152 பேருக்கு வேலைவாய்ப்பும் வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களை சேர்ந்த 100 பெயர்களின் பட்டியலும் என்னிடம் உள்ளது.
போன் நம்பர்
அரசுக்கு சந்தேகம் இருந்தால் அவர்களின் தொலைபேசி எண்ணுடன் கூடிய பட்டியலை தருகிறேன். ஆனால், போராட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை, அதற்கான தரவுகள் இல்லை என மத்திய அரசு கூறியது தப்பு. உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு தயங்குவது ஏன்.
பிரதமர் நிவாரணம்
பிரதமர் தவறு செய்துவிட்டதாக கூறி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த தவறு காரணமாக 700 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.