இந்தியா - பாக் பிரச்சனையில் சவுதி தலையிட போகிறதா? பாக் - சவுதி கூட்டறிக்கை இதைத்தான் சொல்கிறது!
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனையில் சவுதி அரசு ஒருபோதும் தலையிடாது என்று சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனையில் சவுதி அரசு ஒருபோதும் தலையிடாது என்று சவுதி அரேபியா முடிஇளவரசர் முகமது பின் சல்மான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் மேற்கொண்டு இருக்கும் தெற்காசிய பயணம் காரணமாக மிகவும் கொதிப்பான் சூழ்நிலை நிலவி வருகிறது. முதலில் பாகிஸ்தான் சென்ற சல்மான் அங்கு 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களை செய்தார்.
அதன்பின் இந்தியாவில் இன்று 5 முக்கிய ஒப்பந்தங்களை அவர் கையெழுத்திட்டார். இதையடுத்து காஷ்மீர் பிரச்சனையில் சவுதி நேரிடியாக தலையிட போகிறது என்று நிறைய செய்திகள் வெளியானது.
இரண்டு நாடுகள் கூட்டறிக்கை
சல்மானின் பாகிஸ்தான் வருகைக்கு பின், சவுதியும் - பாகிஸ்தானும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த கூட்டறிக்கைதான் தற்போது பிரச்சனை ஆகி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவான கருத்துக்கள் நிறைய இருந்தது. அதேபோல் காஷ்மீர் பிரச்சனை குறித்தும் இதில் முக்கிய தகவல்கள் அடங்கி இருந்தது .
என்ன இருந்தது
அந்த அறிக்கையில், பாகிஸ்தான் ஆசியாவின் பிராந்திய அமைதிக்காக பெரிய அளவில் பாடுபட்டு வருகிறது. ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்பில் பாகிஸ்தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தான் மிக முக்கியமான ஒரு நாடாக மாறி உள்ளது.
உலக நாடுகள்
உலக நாடுகள் பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு கை கொடுக்க வேண்டும். சவுதி தொடங்கி எல்லா நாடுகளும் இந்த தீவிரவாத பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த விஷயங்களை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்று தேவையில்லாமல் அரசியலாக்க கூடாது.
நல்லது
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முயல்வது இந்த பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும். பேச்சுவார்த்தை மட்டுமே இந்தியா- பாக் பிரச்னையை தீர்க்கும், என்று அந்த கூட்டு அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
என்ன தகவல்
இந்த நிலையில் இந்த அறிக்கையை அடுத்து முக்கியமான செய்தி ஒன்று பரவ தொடங்கியது. இந்தியா - பாக் இடையிலான பிரச்சனையில் சவுதி தலையிட போகிறது. இரண்டு நாட்டு பிரச்சனையில் சல்மான் தலையிட்டு தீர்த்து வைப்பார். சவுதி நேரடியாக இதில் களமிறங்கும் என்று கூறப்பட்டது. தற்போது அது பொய் என்று சவுதி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
விளக்கம்
சவுதி தரப்பில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், இந்தியா - பாக் பிரச்சனையில் தலையிடாது. இது அந்த இரண்டு நாடுகள் மட்டுமே பேசி தீர்க்க வேண்டிய விஷயம். இரண்டு நாடுகளின் தனிப்பட்ட பிரச்சனையில் சவுதி தலையிடுவது சரியாக இருக்காது என்று சல்மான் தரப்பு முடிவெடுத்து இருக்கிறது. இதன் மூலம் திங்கள் கிழமையில் இருந்து பரவி வந்த ''சவுதி தலையீடு'' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் என்ன
ஆனால் அதே சமயம் இந்த கூட்டறிக்கையில் ''தீவிரவாத விஷயங்களை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்ல கூடாது'' என்று சவுதி கூறியுள்ளது. ஆனால் தீவிரவாதி அசாரின் விவகாரத்தை, இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறது. இதற்கு எதிராக சவுதி அறிக்கையில் கருத்து தெரிவித்து இருப்பது இந்தியாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.