நாயை 'நாய்' எனக் கூறியதால் ஆத்திரமாம்.. முதியவரை குத்திக் கிழித்த இளைஞர்.. திண்டுக்கல்லில் பயங்கரம்
திண்டுக்கல்: பக்கத்து வீட்டு வளர்ப்பு நாயை 'நாய்' எனக் கூறியதால் ஆத்திரமடைந்த அதன் உரிமையாளர் முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்த பயங்கர சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது.
ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு எல்லாம் கொலை வரை செல்லும் அளவுக்கு மக்களிடம் பொறுமையும், சகிப்புத்தன்மையும் குறைந்துவிட்டது என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த சம்பவத்துடன் சேர்த்து நேற்று மட்டும் இரண்டு கொலைகள் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பொங்கலுக்கு வந்த குடும்பத்தினர்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு மரவப்பட்டியைச் சேர்ந்தவர் ராயப்பன் (65). விவசாயி. இவரது பிள்ளைகளுக்கு திருமணமாகி அனைவரும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். விடுமுறை, பண்டிகை நாட்களில் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ராயப்பனின் வீட்டுக்கு வருவது வழக்கம். அந்த வகையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி ராயப்பனின் மகன்களும், மகள்களும் தங்கள் பிள்ளைகளுடன் ராயப்பன் வீட்டுக்கு சென்றிருந்தனர்.
ஆக்ரோஷமான நாய்
இதனிடையே, ராயப்பனின் பக்கத்து வீட்டில் பெரிய ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாயை வளர்த்து வருகின்றனர். பல நேரங்களில் அந்த நாயை கட்டிப்போடாமல் இருப்பதால் வீட்டில் இருந்து எகிறி குதித்து அது வெளியே வந்துவிடும். மேலும் பலரை அந்த நாய் இவ்வாறு வெளியே வந்து கடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த வீடு இருக்கும் தெரு பக்கமே செல்ல அங்குள்ளவர்கள் பயப்படுவார்கள்.
"நாய் கடித்துவிடும்"
இந்நிலையில், நேற்று ராயப்பனின் பேரப்பிள்ளைகள் அவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பார்த்து பக்கத்து வீட்டு நாய் குரைந்துள்ளது. இந்த சத்தத்தை கேட்டு வெளியே ஓடி வந்த ராயப்பன், "அந்த பக்கம் போய் விளையாடாதீங்க. அங்க இருக்குற நாய் கடித்துவிடும்" என தனது பேரப்பிள்ளைகளை ராயப்பன் எச்சரித்துள்ளார்.
'நாய்' என்று கூறினாயா?
அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் வின்சென்ட்டுக்கு ராயப்பன் கூறுவது கேட்டுள்ளது. இதையடுத்து, அவர் ராயப்பன் வீட்டுக்கு வந்து, "எங்கள் நாயை நாங்கள் குழந்தையாக நினைத்து வருகிறோம். அதை எப்படி நீ நாய் என்று கூறலாம்" எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வின்சென்ட்டின் தம்பி டேனியல் ராஜா, தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ராயப்பனின் நெஞ்சில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த ராயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் டேனியல் ராஜாவை தேடி வருகின்றனர்.