எல்லாம் ஓகே.. 2 விஷயத்தில் சிக்கல்.. இப்படியே போனால் உலக கோப்பை வெல்வது கஷ்டம்.. கவனிப்பாரா தோனி?
துபாய்: இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தின்போது என்னதான் இந்தியா எளிதாக வெற்றி பெற்றிருந்தாலும், 2 விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக மாறியுள்ளன. கவலைதரும் அம்சமாகவும் உள்ளன.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை விரட்டிப் பிடித்தது.
பார்க்க எளிதான வெற்றி மாதிரி தெரிந்தாலும், இந்த போட்டியில், 2 விஷயங்கள் யோசிக்க வைக்கிறது. கண்டிப்பாக மென்டர் தோனியும் இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்திருப்பார் என்றே தெரிகிறது.
சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது.. மீண்டும் அவரை பணியில் சேர்த்துவிட்டோம்- Zomato நிறுவனர் பரபர ட்வீட்
பவுலிங் பிரச்சினை
முதல் முக்கியமான பிரச்சினை, இந்திய அணியின் பந்து வீச்சுதான். எந்தெந்த பந்து வீச்சாளர்களை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறக்க வைக்கலாம் என்பதற்கான ஒத்திகையாக இது பார்க்கப்பட்டது. ஆனால், பல பவுலர்கள் ஏமாற்றத்தை பரிசளித்தனர். ஸ்விங் பந்து வீச்சில் கில்லியான புவனேஸ்வர்குமார் 4 ஓவர்களை வீசி 54 ரன்களை அள்ளிக் கொடுத்து விட்டார். இங்கிலாந்து அடித்த 4ல் ஒரு பங்குக்கும் மேற்பட்ட ரன்னை இவரே கொடுத்து விட்டார்.
முகமது ஷமி
முகமது ஷமியும் 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்தார். ஆனால் இவர் 3 விக்கெட்டுகளையாவது வீழ்த்தி ஆறுதல் கொடுத்தார். ராகுல் சகர் நிலைமையும் மோசம். 4 ஓவருக்கு 43 ரன்கள். 1 விக்கெட். இந்த மூன்று பேர் பந்து வீச்சையும் உரித்து வெளுத்து விட்டனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்.
பும்ரா, அஸ்வின் காப்பாற்றினர்
இதில் காப்பாற்றியது ஜஸ்ப்ரிட் பும்ராவும், அஸ்வினும்தான். பும்ரா, 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பும்ரா பந்தை சமாளிப்பது கஷ்டம்தான். எனவே அவர் ரன் குறைவாக கொடுத்ததில் வியப்பில்லை. அஸ்வின் சிக்கனமாக வீச காரணம், அவரது பந்து வீச்சு ஆக்ஷனில் செய்த மாற்றங்கள்தான். அவர் வழக்கமான ஒரு ஆப் ஸ்பின் பவுலரை போல நேற்று பந்தை வீசினார். கையை வளைப்பது போன்ற விஷயங்களை அவர் ஐபிஎல் தொடரில் செய்து கடுப்பை கிளப்பியிருந்தார். ஆனால் தோனி மென்டராக வந்ததாலோ என்னவோ, வழக்கம்போல அடக்கமாக பந்து வீசி தனது பழைய பார்முக்கு வந்து விட்டார்.
Recommended Video
யோசனை
அதேநேரம், புவனேஸ்வர்குமார், ஷமி, ராகுல் சகர் நிலைமைதான் கவலையளிக்கிறது. புவனேஸ்வர் குமார், ஷமி இருவரும் அனுபவ வீரர்கள். எனவே பாடம் கற்றுக் கொண்டு மீண்டு வந்து விடுவார்கள் என்று நம்பலாம். அவர்கள் இதற்கு முன்பும் அப்படி மீண்டு வந்துள்ளனர். ஆனால் அப்படி நடக்காவிட்டால் என்னவாகும் என்பதுதான் யோசிக்க வைக்கும் விஷயமாக இருக்கிறது.
சூர்யகுமார் யாதவ்
இந்திய தரப்பு வேகமாக சேஸ் செய்திருந்தாலும், பேட்டிங்கிலும் ஒரு பிரச்சினையை பார்க்க முடிந்தது. சூர்யகுமார் யாதவ் 9 பந்துகளில் 8 ரன்கள்தான் எடுத்தார். ஐபிஎல் தொடரில் மும்பைக்காக அவர் ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரிலும் கடைசி போட்டியை தவிர முந்தைய பல போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சரியாக ஆடவில்லை. அவர் ஒரு ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன். எளிதாக ரன்களை குவிப்பார். எளிதாக அவுட்டாகமாட்டார். ஆனால், எமிரேட்ஸ் மைதானங்களில் சரியாக ஆடவில்லை. எனவே அவருக்கு பதில் 11 பேர் கொண்ட அணியில் இஷான் கிஷன் இருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர் எப்படி ஆடுகிறார் என்பதை பார்த்து, தோனி மற்றும் பயிற்சியாளர் அந்த முடிவை எடுக்கக் கூடும் என்று தெரிகிறது.