வேலியே பயிரை மேய்ந்த கதை... மணிப்பூர் முதல்வர் வீட்டில் ‘கை ’வைத்த 2 பாதுகாவலர்கள் கைது
இம்பால்: மணிப்பூர் முதல்வர் வீட்டில் திருடிய பாதுகாவலர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மணிப்பூர் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங்கிற்கு தொவ்பல் மாவட்டத்தில் ஒரு வீடு உள்ளது. கடந்த 15-ந் தேதி தனது மனைவி லந்தோனியுடன் அங்கு சென்ற ஓக்ராம் இபோபி தனது வீடு உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
முதல்வர் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த வீட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த முகமது சமிர், ஓக்ராம் சமானந்தா ஆகிய இரண்டு பாதுகாப்பு வீரர்களே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்தும் இந்திய ரிசர்வ் படையை சேர்ந்த அந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் ஓக்ராம் சமானந்தா, முதல்வரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருட்டு நடந்ததைத் தொடர்ந்து முதல்வர் ஓக்ராம் இபோபியின் வீட்டில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டு, வேறு படைவீரர்கள் அப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.