காஷ்மீரில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை.. பாதுகாப்புப் படையினர் அதிரடி
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் வீட்டினுள் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் 2 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் நகரை அடுத்த பஸல்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து நேற்று அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இரவு தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்ட நிலையில் தீவிரவாதிகள் தப்பிவிடாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பஸல்போரா கிராமத்தின் அனைத்து பாதைகளும் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து அந்த வீட்டைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த இரு தீவிரவாதிகளும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இப்பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications