ஸ்பெக்ட்ரம் ஊழல்: சாட்சியம் பதிவு செய்ய ஷாஹித் பால்வா திடீர் மறுப்பு!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு சாட்சியான ஷாஹித் பால்வா, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தனது சாட்சியத்தைப் பதிவு செய்ய திடீரென நேற்று மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து, அவரது சாட்சியம் பதிவு செய்யப்படாமலேயே இந்த வழக்கில் சிபிஐ தரப்பு குறுக்கு விசாரணையைத் தொடங்க சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி அனுமதி அளித்தார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளிடம் கடந்த இரண்டு மாதங்களாக சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஷாஹித் பால்வா நீங்கலாக மற்ற அனைவரும், அவர்களின் தரப்பு சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களின் சாட்சியத்தைப் பதிவு செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட சிலர், தங்கள் தரப்பு சாட்சிகளாக தாங்களே ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, விடுபட்டுப் போன ஷாஹித் பால்வாவின் சாட்சியத்தை நேற்று பதிவு செய்ய சிறப்பு நீதிபதி சைனி அனுமதி அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது. அப்போது ஆஜரான ஷாஹித் பால்வா, இந்த வழக்கில் நான் குற்றம் சாட்டப்பட்டுள்ளேன். எனது தரப்பு சாட்சியத்தை நானே பதிவு செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.
அதைப் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி சைனி, குற்றம் சாட்டப்பட்ட ஷாஹித் பால்வா தனது தரப்பு சாட்சியத்தை பதிவு செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், தற்போது அவரே அதற்கு விருப்பமில்லை என்று கூறுவதால் அவரது சாட்சியத்தைப் பதிவு செய்யத் தேவையில்லை. இந்த வழக்கில் சிலரை ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு புதனன்று பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங், உதவி இயக்குநர் சத்யேந்திர சிங், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை உதவிச் செயலர் விபில் கபூர், வங்கி அதிகாரி டி. மணி ஆகியோரை அரசுத் தரப்பு சாட்சிகளாக ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியுள்ளது. இதேபோல, இந்த வழக்கில் சிபிஐ சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கலைஞர் டிவி நிதிப் பிரிவு பொது மேலாளர் ஜி. ராஜேந்திரனிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.