ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 32 தமிழரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
திருப்பதி: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 32 தமிழரின் ஜாமீன் மனுவை திருப்பதி அமர்வு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி 32 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது செம்மரக் கடத்தல் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து திருப்பதி ஜெயிலில் அடைத்தனர்.

அவர்கள், 32 தமிழர்கள் சார்பில் ஜாமீன் கேட்டு திருப்பதி 5-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் ஆகஸ்ட் 8-ந் தேதி மனுத்தாக்கல் செய்தனர். ஜாமீன் மனு நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர மாநில வனத்துறை சட்ட பிரிவுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு மே 15-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 32 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்டு ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
இந்த விவகாரத்தில் கைதான 32 தமிழர்களை ஜாமீனில் எடுப்பதற்கு தேவையான சட்ட உதவிகளை செய்வதற்காக தமிழக அரசின் சிறப்பு வக்கீல்கள் முகமது ரியாஸ் மற்றும் அருள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கைதானவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, இன்று மீண்டும் திருப்பதி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மீண்டும் 32 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications