பெட்ரோல் போன்றே டீசல் விலையும் குறையும்: ராஜ்நாத் சிங் சூசகத் தகவல்
டெல்லி: பெட்ரோல் விலையைப் போன்றே டீசலின் விலையை குறைக்கவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதமிருமுறை மாற்றி அமைக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அந்நியச் செலாவணியில் மாற்றங்கள் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.92 குறைக்கப்பட்டும், டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா அதிகரிக்கப்பட்டும் புதிய விலை அமலுக்கு வந்தது.
கடந்த 2013ம் ஆண்டு ஜனவரியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி, டீசல் விலை ஒவ்வொரு மாதமும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த விலை அதிகரிப்பு உற்பத்தி செலவுக்கும் சில்லறை விற்பனைக்கு இடையிலான வித்தியாசம் குறையும் வரையில் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலைக்குறைப்பு செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். டீசல் விலை உயர்வு பொதுமக்களைப் பாதிக்கும் எனவே அதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், பெட்ர்ஓல் விலையைப் போலவெ டீசல் விலையும் குறைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹரியானாவின் பல்வால் மாவட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
தேர்தல் வாக்குறுதி...
எங்களில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் விலைவாசி உயர்வை கட்டுபடுத்தியுள்ளோம்.
டீசல் விலை...
அதேபோல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.50 வரை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலையை குறைப்பதில் எங்கள் கவனம் உள்ளது.
அவகாசம் குறைவு...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய 3 மாத அவகாசம் மிகவும் குறைவானது.
மத்திய அரசின் பணி....
நாட்டு மக்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் நிஜமாக்க, பதவியேற்ற முதல் நாளில் இருந்தே மத்திய அரசு பணியாற்றி வருகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜன்- தான் திட்டம்...
மேலும், சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜன்-தான் திட்டம் பற்றி குறிப்பிடுகையில், ‘திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 1.5 கோடி கணக்குகள் துவங்கப்பட்டுவிட்டன என்றும், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்கும் நிலை உருவாகும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இது நிறைவேறும் என்றும் கூறினார்.