பிரியங்காவை தொடர்ந்து, சோனியா காந்தியும் ரேபரேலி தொகுதியில் சுற்றுப் பயணம்!
ரேபரேலி: உத்தரபிரதேச மாநிலம், பச்சர்வான் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
டேராடூன் - வாரணாசி செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 20ம் தேதி பச்சர்வான் ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 30 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இது சோனியாவின் ரேபரேலி தொகுதிக்குட்பட்ட பகுதி என்றபோதிலும், சோனியா அங்கு செல்லவில்லை. இதுகுறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்ததை தொடர்ந்து, ஒருநாள் பயணமாக இன்று ரேபரேலி சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பச்சர்வான் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை, அங்குள்ள விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசினார்.
அப்போது பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கிய சோனியா காந்தி, தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது ரயில் விபத்தில் பலியான ஷிவேந்திர சிங் என்பவரின் மனைவி சுஷ்மாவுக்கு பள்ளியில் ஆசிரியர் பணிக்கான நியமன ஆணையும் சோனியா காந்தி வழங்கினார்.
இன்று மாலை சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் டெல்லி புறப்படும் சோனியா காந்தி, அதற்கு முன் மழை மற்றும் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையையும் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிகளின்போது, சோனியா காந்தியுடன் அவரது மகள் பிரியங்கா காந்தியும் உடன் வந்திருந்தார்.
நேற்று ரேபரேலியில் பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.