அமர்நாத் குகை அருகே மேகவெடிப்பு.. 15 பேர் பலி.. 20க்கும் மேற்பட்டோர் மாயம்- மீட்புப் பணிகள் தீவிரம்!
ஸ்ரீநகர் : புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் அமர்நாத் குகை அருகே உள்ள பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 15 பேர் பலியாகினர்.
இன்று மாலை 5.30 மணியளவில் திடீரென அமர்நாத் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் 15 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அப்பகுதியில் மழை விட்டுவிட்ட நிலையில், வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமர்நாத் புனித யாத்திரை
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கியது. இந்த புனித யாத்திரை, ஆகஸ்ட் 11 வரை நடக்க உள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் அங்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேகவெடிப்பு
கடல் மட்டத்தில் இருந்து, 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் யாத்ரீகர்களின் பயணத்தையும் அவர்களின் பாதுகாப்பையும் கண்காணிக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்நிலையில் அமர்நாத் குகைக் கோவிலுக்கு அருகே இன்று மாலை 5.30 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. மேகவெடிப்பால் அப்பகுதியில் மழை கொட்டித்தீர்த்த நிலையில், அமர்நாத் குகை கோவில் இன்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

15 பேர் பலி
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் தங்கியிருந்த 15 யாத்திரீகர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் தீவிரம்
மீட்புப்படை அதிகாரிகளின் கூற்றுப்படி, இதுவரை பதினைந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேருக்கும் மேல் மாயமாகியிருப்பதால் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்புப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications