பஞ்சாபில் "ஷாக்".. சிறை உடைப்பு... காலிஸ்தான் தலைவரை அதிரடியாக விடுவித்த 10 பேர் கும்பல் #nabhajail
பஞ்சாப் மாநிலம் நாபாவில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் விடுதலைப் படை தலைவர் மின்டூவை 10 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் துணிகரமாக மீட்டுச் சென்றது.
நாபா, பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் நாபா நகரில் உள்ள சிறைச்சாலைக்குள் 10 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் புகுந்து, சிறைச்சாலையை உடைத்து அங்கு அடைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டூ மற்றும் 4 பேரை மீட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. போலீஸ் சீருடையில் இந்தக் கும்பல் வந்துள்ளது. கையில் அதி நவீன துப்பாக்கிகளுடன் வந்த இக்கும்பல் சரமாரியாக சுட்டபடி சிறைக்குள் புகுந்தது. அங்கிருந்த மின்டூ மற்றும் 4 கைதிகளை மீட்டு துணிகரமாக தப்பிச் சென்றது.
மின்டூ தவிர மீட்டுச் செல்லப்பட்ட மற்றவர்கள் - குர்ப்ரீத் சிங், விக்கி கோந்த்ரா, நிதின் தியோல், விக்ரம்ஜித் சிங் விக்கி ஆகியோர் என்று தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்குப் போலீஸார் விரைந்துள்ளனர். அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய கும்பலைப் பிடிக்க முழு அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே காலிஸ்தான் போராளிகள், மின்டூவை மீட்க முயற்சிக்கலாம் என்று உளவுத் தகவல் இருந்தது. ஆனாலும் சிறையில் போதிய பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் தரப்பு தவறி விட்டது. இதனால்தான் இன்று சிறைச்சாலை உடைக்கப்பட்ட பெரும் பரபரப்பு அரங்கேறி விட்டது.
10 தீவிரவுாத வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் மின்டூ. கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். தாய்லாந்திருந்து திரும்பியபோது இவர் பிடிபட்டார்.
2008ம் ஆண்டு சிர்சாவைச் சேர்ந்த தேரா சச்சா செளதா தலைவர் குர்மீத் ரஹீம் சிங் மீதான தாக்குதல், 2010ல் ஹல்வாரா வி்மானப்படைத் தளத்திற்குக் குண்டு வைத்தது உள்ளிட்ட வழக்குகளில் இவர் கைதானவர்.
47 வயதான மின்டூ, வாத்வா சிங் தலைமையிலான பப்பர் கல்சா சர்வதேச அமைப்பு என்ற போராளிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்து தனியாக இயங்கி வந்தவர். 2009 முதல் இவர் தனி காலிஸ்தான் விடுதலைப் படையை நிறுவி செயல்பட்டு வந்தார். பஞ்சாப் போலீஸாருக்குப் பெரும் சவாலாக விளங்கி வந்தவர் மின்டூ.
காலிஸ்தான் போராளிகள், மின்டூவை துணிகரமாக மீட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.