ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: அதிக இடங்களைக் கைப்பற்றியது பா.ஜ.க.! காங்கிரஸும் விஸ்வரூபம்!!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவின் தொகுதிக்கு உள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. அதுவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெல்லாத காங்கிரஸ் கட்சியின் விஸ்வரூபம் பாரதிய ஜனதாவை கதிகலங்க வைத்துள்ளது.
ராஜஸ்தானில் 129 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 76.05% வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் 10,582 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
129 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 3,351 வார்டுகளில் 1,443 இடங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.
காங்கிரஸ் 1164, சுயேட்சைகள் 703, தேசியவாத காங்கிரஸ் 19, பகுஜன்சமாஜ் 16, இந்திய கம்யூனிஸ்ட் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளன.
ஆஜ்மீர் மாநகராட்சி உள்பட 66 உள்ளாட்சி மன்றங்களை ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கைப்பற்றியது. காங்கிரசுக்கு 40 இடங்கள் கிடைத்தன.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றாலும் முதல்வர் வசுந்தரா ராஜேவின் கோட்டையில் காங்கிரஸ் பெருவாரியான வார்டுகளை கைப்பற்றியுள்ளது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
A big thank you to people of Rajasthan. Congrats to Rajasthan BJP workers & leaders on the commendable performance in the civic polls.
— Narendra Modi (@narendramodi) August 20, 2015
இத்தனைக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ராஜஸ்தான் வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில், ராஜஸ்தான் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றக் காரணமாக இருந்த பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பாராட்டுக்கள் என்று மோடி தெரிவித்துள்ளார்.