சசிகலா விடுதலையாக சான்ஸே இல்லைன்னு சொல்ல முடியாது?
டெல்லி: 1991ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பை கையில் எடுத்துக் கொண்டுதான், தன் வழக்கின் தீர்ப்பை மாற்றச் சொல்லி சசிகலா சீராய்வு மனு போட்டிருக்கிறார். 1991 தீர்ப்பை உச்சநீதிமன்றம் பரிசீலித்தால் தனக்கும் விடுதலை கிடைக்கும் என்ற புதிய நம்பிக்கையில் உள்ளாராம் சசிகலா.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டனர். ஆனால் மேல் முறையீட்டில் இவர்கள் நால்வரையும் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா மரணமடைந்தார். மற்ற நால்வரையும் குற்றவாளிகளாக உறுதி செய்து, தண்டனையையும் அனுபவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி தற்போது சசிகலா உள்ளிடட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்த இந்த நிலையில் இரண்டரை மாத சிறைவாசம் முடிந்துள்ள நிலையில், சீராய்வு மனுவை இந்த மூன்று பேரும் திடீரென தாக்கல் செய்துள்ளனர்.
ஏன் திடீர் சீராய்வு மனு?
வழக்கறிஞர்கள் தரப்பில் புதிய நம்பிக்கை கிடைத்ததன் அடிப்படையில்தான் இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 1991ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில்தான் இந்த சீராய்வு மனுவுக்கே சசிகலா குரூப் போயுள்ளதாம்.
அது என்ன தீர்ப்பு?
1991ம் ஆண்டு வழக்கும் ஒரு ஊழல் வழக்குதான். கிட்டத்தட்ட ஜெயலலிதா வழக்கு போலத்தான். அதிலும் முக்கியக் குற்றவாளி மரணமடைந்து விட்டதால், அவர் மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் கைவிட்டது. அதேபோல மற்ற குற்றவாளிகள் மீதான தண்டனையையும் உச்சநீதிமன்றம் கைவிட்டுள்ளது. இதைத்தான் தற்போது கையில் எடுத்துள்ளது சசிகலா தரப்பு.
அதே மாதிரி எங்களையும் விடுவிங்க
1991ம் ஆண்டு தீர்ப்பைப் போலவே எங்களையும் விடுவிக்க வேண்டும் என்பதே தற்போது இந்த 3 பேரும் விடுத்துள்ள கோரிக்கையாகும். ஆனால் உச்சநீதிமன்றம் இவர்களின் கோரிக்கையை ஏற்குமா என்று தெரியவில்லை. சீராய்வு மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போதுதான் இது தெரிய வரும்.
ஜெயலலிதா விவகாரம்
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு விவகாரத்தில் ஜெயலலிதா இறந்த காரணத்தால் அவர் மீதான தண்டனை, அபராதத்தை மட்டும் கைவிட்டது உச்சநீதிமன்றம். அதேசமயம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை, தலா ரூ. 10 கோடி அபராதத்தை அது உறுதி செய்துள்ளது நினைவிருக்கலாம்.
காதலர் தினம முதல்
பிப்ரவரி 14ம் தேதி முதல் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டுள்ளனர். இரண்டரை மாத காலமாக அமைதியாக இருந்து வந்த இந்த மூவரும் தற்போது திடீரென சீராய்வு மனுவை கையில் எடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. யாராவது விவராமான சட்ட நிபுணரின் ஆலோசனை இவர்களுக்குக் கிடைத்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.