தலித் சகோதரிகள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு- சிபிஐ விசாரணை ஆரம்பம்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் தலித் சகோதரிகள் இருவர் கோடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம் தொடர்பாக, இன்று படான் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்துகிறது சிபிஐ.
உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி 14 மற்றும் 15 வயதுடைய உறவுக்கார தலித் சிறுமிகள் இருவர் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். நள்ளிரவில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற அவர்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கிய இந்த சம்பவத்திற்கு ஐநாவும் கண்டனம் தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். சரியாக நடவடிக்கை எடுக்காத இரு போலீஸ்காரர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அம்மாநில டி.ஜி.பி. ஆனந்த் லால் பானர்ஜி, ‘சிறுமிகளில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது உறுதி செய்யப்படவில்லை என்றும், சொத்துத் தகராறு காரணமாகக் கூட இக்கொலை நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
டி.ஜி.பி.யின் இந்தக் கருத்துக்கு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் கண்டனம் தெரிவித்தனர். உத்திரப்பிரதேச அரசு மீதான நம்பகத்தன்மை போய் விட்டதாகவும், வழக்கை திசை திருப்பும் நடவடிக்கைகளில் மாநில போலீசார் ஈடுபடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், இக்கொலையின் பின்னணியில் சொத்துப் பிரச்சினை எதுவும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். உடனடியாக வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அப்போது தான் உண்மைகள் அனைத்தும் வெளிவரும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் சிறுமிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, அவர்கள் இருவரும் கோடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது அம்பலமானது. எனவே, போலீசார் வழக்கை திசை திருப்ப முயல்வதாக சிறுமிகளின் உறவினர்களோடு மகளிர் அமைப்புகளும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதனால் அகிலேஷ் யாதவ் அரசுக்கு நெருக்கடி உண்டானது. உத்திரப்பிரதேசத்தில் தொடரும் பாலியல் பலாத்காரங்களைச் சுட்டிக் காட்டி அம்மாநில முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனால், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு சிபாரிசு செய்தது மாநில அரசு. அதன்படி நேற்று இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து டி.ஐ.ஜி நீரஜ்குமார் தலைமையிலான 20 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. அக்குழு இன்று படான் கிராமத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் நேரில் விசாரணை நடத்துகிறது.