சின்னத்துடன் வாக்களித்த வாரணாசி காங். வேட்பாளர் மீது வழக்குப்பதிவு- தேர்தல் ஆணையம் உத்தரவு!!
வாரணாசி: வாக்குச்சாவடிக்குள் கட்சி சின்னத்துடன் நுழைந்து வாக்களித்த வாரணாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்க்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் அண்மையில் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளரும் அம்மாநில முதல்வருமான நரேந்திர மோடி வாக்களித்தார். அவர் வாக்களித்த பின்னர் கட்சி சின்னமான தாமரையை கையில் ஏந்திய படி வாக்குச் சாவடி அருகே புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அந்த சின்னத்துடனேயே செய்தியாளர்களை சந்தித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் மீது மாநில அரசு வழக்குப் பதிவு செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் தமது குர்தாவில் கை சின்னத்தை பொருத்தியபடியே வாக்களித்தார். இதுவும் சர்ச்சையை கிளப்பியது. அஜய் ராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, ஆம் ஆத்மி கட்சியினர் வலியுறுத்தினர்.
விதிமீறலே
இது குறித்து கருத்து தெரிவித்த வாரணாசி தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் பிரவீன்குமார், வாக்குச் சாவடிக்குள் சின்னங்களை காண்பிப்பது விதிமீறல்தான். இது குறித்த அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
இதனிடையே அஜய் ராய் மீது முதல் வழக்குப் பதிவு செய்யுமாறு தலைமை தேர்தல் ஆணையம், வாரணாசி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
உ.பி.யில் லேப் டாப் சர்ச்சை
சின்னத்துடன் காங். வேட்பாளர் வாக்களித்தது விதிமீறலே - வாரணாசி தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் சந்தெளலி என்ற வாக்குச் சாவடியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் மற்றும் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் படத்துடன் கூடிய லேப் டாப் பயன்படுத்தப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.