காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற தகுதியில்லை: அட்டர்னி ஜெனரல்
டெல்லி: லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கோர காங்கிரஸ் கட்சிக்குத் தகுதியில்லை என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 282 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
இந்திய அரசியல் சட்டப்படி மொத்தமுள்ள தொகுதிகளில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியும்.

இருப்பினும் எதிர்க்கட்சி பதவியை எங்களுக்கு தர வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சபாநாயகரை நேரில் சந்தித்தும், கடிதங்கள் மூலமும் வலியுறுத்தி வந்தனர். மேலும், எங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி தராவிட்டால், நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் எனவும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இந்த சிக்கலான விஷயத்தில் சட்ட நிபுணர்கள் மற்றும் அரசியல் சட்ட நிபுணர்களின் கருத்து கேட்டு தான் முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹட்கியின் கருத்தையும் அவர் கேட்டிருந்தார்.
காங்கிரஸ்க்கு தகுதியில்லை
அட்டார்னி ஜெனரல் தனது கருத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு அனுப்பினார். அதில், 543 எம்.பி.க்களை கொண்ட லோக்சபாவில் 10 சதவீதமான 55 எம்.பி.க்கள் இல்லாததால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரும் தகுதி இல்லை.
எந்த உதாரணமும் இல்லை
10 சதவீத இடங்களை பெறாத ஒரு கட்சிக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியதாக முதல் லோக்சபா ஜி.வி.மவ்லாங்கர் சபாநாயகராக இருந்தது முதல் இதுவரை எந்த முன்னுதாரணங்களும் இல்லை.
தெலுங்குதேசத்துக்கு மறுப்பு
ராஜீவ் காந்தி காலத்தில் கூட காங்கிரஸ் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருந்தாலும், தெலுங்குதேசம் கட்சிக்கு இதே காரணத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க மறுத்துவிட்டது என்று அட்டார்னி ஜெனரல் கூறியிருக்கிறார்.
ஐ.மு. கூட்டணி
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 60 எம்.பி.க்கள் இருப்பதாக கூறினாலும் இதற்கும் எந்த முன்னுதாரணமும் இல்லை என்று கூறி காங்கிரசின் கோரிக்கையை அட்டார்னி ஜெனரல் நிராகரித்துவிட்டார்.
அதிகாரிகள் மறுப்பு
இதுகுறித்து கருத்து தெரிவிக்க லோக்சபா செயலக அதிகாரிகள் மறுத்து விட்டனர். இந்த விவகாரத்தில் விரை வில் முடிவு எடுக்கப்படும் என்று மட்டும் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கருத்து
அட்டர்னி ஜெனரலின் கருத்து குறித்து, காங்கிரஸ் பொதுச்செயலர் ஷகீல் அகமது கூறுகையில், ''அரசின் எண்ணத்தையே, முகுல் ரோஹட்கியின் கருத்து பிரதிபலிக்கிறது. அவர், சபாநாயகரை தவறாக வழிநடத்தி உள்ளார். இருப்பினும், இந்த விஷயத்தில், சபாநாயகர் அறிவிக்கும் இறுதி முடிவுக்குப் பின், காங்கிரஸ் தன் கருத்தை தெரிவிக்கும்,'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications