இந்து கடவுளை அவமதித்த வழக்கில் டோணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது தவறு: வக்கீல் விளக்கம்
விஜயவாடா: கடவுள் விஷ்ணு போன்ற தோற்றத்தில் பத்திரிகையில் படம் வெளியான வழக்கில், டோணிக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதில் குழப்பம் இருப்பதாக அவரது வழக்கறிஞர் ரஜ்னீஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் டோணி, அதிகப்படியான விளம்பர படங்களில் நடித்துவருவதை சுட்டிக்காட்டும் வகையில் ஒரு ஆங்கில வார இதழ், அவரை விஷ்ணு போல சித்தரித்து, ஒவ்வொரு கைகளிலும் ஏதாவது ஒரு விளம்பர பிராண்ட் இருப்பதை போன்ற படத்தோடு அட்டைப்பட கட்டுரை வெளியிட்டது.
அதில் ஒரு கையில் ஷூவை தூக்கி வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்து கடவுளை ஷூ தூக்கும் போசில் காண்பித்த பத்திரிகை மற்றும் அப்படி போஸ் கொடுத்த டோணிக்கு எதிராக ஆந்திர மாநிலம் விஜயவாடா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் டோணி ஆஜராகவில்லை என்பதற்காக நேற்று கோர்ட் அவருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்தது. இதுகுறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளார் டோணி வழக்கறிஞர் ரஞ்னீஸ் சோப்ரா. அவர் கூறுகையில், டோணி சட்டத்தை மதிப்பவர். கோர்ட்டில் ஆஜராகுமாறு ஏற்கனவே விஜயவாடா கோர்ட் அனுப்பிய சம்மன் டோணியால் பெறப்படவில்லை.
டோணி அந்த சம்மனை பெறாத நிலையிலும், அவர் சம்மனுக்கு பதில் தரவில்லை என காரணம் கூறி பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், இதில் தவறு உள்ளது. ஏற்கனவே இதேபோன்ற வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. அந்த வழக்கிற்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது, என்று ரஞ்னீஸ் தெரிவித்தார்.