என்கவுண்ட்டர் பீதி- குஜராத்தில் இருந்து தப்பி ராஜஸ்தான் கோர்ட்டில் சரணடைய முயற்சித்தேன்: தொகாடியா
என்கவுண்ட்டர் பீதியால் குஜராத்தில் இருந்து தப்பி சென்று ராஜஸ்தான் நீதிமன்றத்தில் சரணடைய முயற்சித்ததாக விஹெச்பி தலைவர் தொகாடியா கூறியுள்ளார்.
Recommended Video
அகமதாபாத்: தம்மை என்கவுண்ட்டரில் கொன்றுவிடுவார்களோ என அஞ்சி குஜராத்தை விட்டு தப்பி ஓடி ராஜஸ்தான் நீதிமன்றத்தில் சரணடைய தாம் முயற்சித்ததாக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கதறியழுதபடியே விவரித்திருக்கிறார்.
தீவிர இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் தொகாடியாவை திடீரென காணவில்லை என நேற்று பரபரப்பு ஏற்பட்டது. குஜராத்தில் அந்த இயக்கத்தின் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தொகாடியாவை குஜராத் போலீசார் கைது செய்ததாக கூறப்பட்டது. ஆனால் குஜராத் போலீசாரோ, ராஜஸ்தான் போலீஸார்தான் தொகாடியாவை கைது செய்து வந்துள்ளனர் என கூறியது. இந்துத்துவா அமைப்பின் தலைவர் தொகாடியாவை பாஜக ஆளும் மாநிலங்களின் போலீசாரே கைது செய்ய வந்திருப்பதும் இந்துத்துவா தலைவர் மாயமானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\
இந்நிலையில் சுயநினைவில்லாத நிலையில் தொகாடியா மருத்துவமனையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் கண்ணீர் கதறலுடன் தொகாடியா நடந்ததை விவரித்தார். தொகாடியா கூறியதாவது:
ஆட்டோவில் தப்பி ஓட்டம்
10 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ஒன்றுக்காக என்னை குறிவைக்கின்றனர். என்னுடைய குரலை ஒடுக்குவதற்காக இந்த முயற்சியை மேற்கொள்கிறார்கள். நேற்று காலை நான் பூஜை செய்து கொண்டிருந்தேன். அப்போது குஜராத், ராஜஸ்தான் போலீஸ் படை என்னை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்வதற்காக வந்துள்ளதாக எனக்கு தகவல் வந்தது. இதை என்னுடைய பாதுகாவலர்களிடம் தெரிவித்துவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறி தப்பினேன்.
போன் சுவிட்ச் ஆப்
முதலில் தெல்டெஜ் பகுதிக்கு சென்றேன். அங்கிருந்து ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா, உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா ஆகியோரை தொடர்பு கொண்டு நிலைமை சொன்னேன். ஆனால் அவர்களோ ராஜஸ்தான் போலீசார் குஜராத்துக்கு வந்துள்ளது தங்களுக்குத் தெரியாது என கூறிவிட்டனர். இது என்கவுண்ட்டர் சந்தேகத்தை வலுப்படுத்தியது. அதனால் என்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன்.
சரணடைய திட்டம்
பின்னர் என்னுடைய ராஜஸ்தான் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டேன். எனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள கைது வாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்களோ இது நீதிமன்ற விவகாரம்.. அப்படி ரத்து செய்ய வைப்பது கடினம் என வழக்கறிஞர்கள் கை விரித்துவிட்டனர். இதனைத் டொடர்ந்து ராஜஸ்தானுக்கு விமானம் மூலம் சென்று கங்காபுத் நீதிமன்றத்தில் சரணடையலாம் என முடிவெடுத்தேன்.
சுயநினைவு இல்லை
ஒரு ஆட்டோவில் விமான நிலையம் சென்று கொண்டிருந்தேன். அப்போது என் உடல்நலன் பாதிக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினேன். அதன்பிறகு சுயநினைவு இல்லை. சுயநினைவு திரும்பிய போது நான் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது கூட தெரியவில்லை. நான் மரணத்துக்கும் என்கவுண்ட்டருக்கும் பயப்படவில்லை. ஆனால் சட்டத்தை என்னால் முயன்றவரை பாதுகாக்க முயற்சிக்கிறேன்.
சதிகாரர்களை சொல்வேன்
இந்துக்களுக்கான எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும். ராமர் கோவில் விவகாரம், பசுவதை தடுப்பு சட்டம், காஷ்மீர் பண்டிட்டுகளை மீளக் குடியமர்த்துதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் நான் குரல் கொடுத்து வருகிறேன். எனது இந்த குரலை ஒடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. என் மீதான பழைய வழக்குகள் தூசு தட்டப்படுகின்றன. எனது குரலை ஒடுக்குவதற்காக என்னை கைது செய்ய பல மாநிலங்களில் முயற்சிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. என்னுடைய குரலை ஒடுக்க சதித்திட்டம் தீட்டியவர்கள் பெயரை சரியான சந்தர்ப்பத்தில் வெளியிடுவேன்,.
யார் உத்தரவிட்டது?
ராஜஸ்தான் போலீசார் குஜராத்துக்கு வந்தது அம்மாநில முதல்வருக்கு தெரியாது என்கிறார். அதேதான் குஜராத்திலும் நடந்தது. இங்கு எனக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது தெரியாது என முதல்வரும் உள்துறை அமைச்சரும் கூறுகின்றனர். யாருடைய உத்தரவின்பேரில் இப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை சரியான சமயத்தில் அம்பலப்படுத்துவேன்.
இவ்வாறு தொகாடியா கூறினார்,