சந்திரபாபு நாயுடு விரித்த வலையில் அடுத்தடுத்து சிக்கும் எம்.எல்.ஏக்கள்! அதிர்ச்சியில் ஜெகன்!!
ஹைதராபாத்: தெலுங்குதேசம் கட்சிக்கு 2 எம்.பிக்கள் தாவியதைத் தொடர்ந்து 5 எம்.எல்.ஏக்களும் கட்சி தாவ முடிவு செய்துள்ளதால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளாராம்.
லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல்கள் முடிந்த கையோடு ஜெகனுக்கு சொந்த கட்சியினர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 எம்.பிக்கள் திடீரென தெலுங்குதேசம் கட்சிக்குத் தாவினர்.
இவர்களைத் தொடர்ந்து கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஜெகன் எம்.எல்.ஏக்களில் 5 பேர் தற்போது தெலுங்குதேசத்துக்கு தாவும் முடிவில் இருக்கின்றனராம். இதற்கான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாம்.
அத்துடன் எஞ்சிய எம்.எல்.ஏக்களையும் வளைப்பதற்கான வலையை சந்திரபாபு நாயுடு விரித்துள்ளாராம். இதனால் மேலும் சில எம்.எல்.ஏக்களும் தெலுங்குதேசம் பக்கம் தாவ உள்ளனராம்.
அத்துடன் ஜெகனின் கோட்டையான கடப்பாவிலும் கூட வலை விரிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறாம் சந்திரபாபு நாயுடு. எம்.எல்.ஏக்களை மட்டுமின்றி கணிசமான அளவுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளையும் வளைத்துப் போடுவதில் தெலுங்குதேசம் தீவிரமாக இருக்கிறதாம்.
இதனால் கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தக்க வைப்பதில் ஜெகன் மும்முரம் காட்டி வருகிறாராம்.