42 பொருடகள் மீதான வரியை குறையுங்கள்.... ஜிஎஸ்டி மாநாட்டில் ஜெயகுமார்
42 விதமான பொருள்களின் மீது விதிக்கப்படவுள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி மாநாட்டில் அமைச்சர் ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்.
டெல்லி: 42 விதமான பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியானது நீண்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது.
இந்நிலையில் அதில் உள்ள சில பிரச்சினைகளை களைவதற்காகவும், மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதற்காகவும் ஜிஎஸ்டி தொடர்பான மாநாடுகள் நடத்தப்படுகின்றன.
வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ள இந்த வரி விதிப்பு குறித்து டெல்லியில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு நிதி அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், மைதா , கோதுமை, கடலை மாவு ஆகியவற்றுக்கு வரி விதிக்கக் கூடாது.
வணிகச் சின்னம் இடப்பட்ட மற்றும் இடப்படாத உணவு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது. கைத்தறி துணிகளுக்கு வரி விலக்கு அளித்திடவும் வலியுறுத்தியுள்ளேன்.
குடிநீர் கேன்களுக்கும், பாக்கெட் நீருக்கும், கைத்தறி துணிகளுக்கும் வரி விதிக்கக் கூடாது என்றும் மசாலா பொருள்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கவும், ஊறுகாயை பொறுத்தவரை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தியுள்ளோம். உரங்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்க வேண்டும்.
அரிசி பிரதான உணவு என்பதால் அதற்கு வரி விதிக்கக் கூடாது. இந்த மசோதாவானது தமிழகத்தில் விரைவில் ஜிஎஸ்டி மசோதா அமல்படுத்தப்படும். பனை வெல்லத்திற்கு 18% வரி விதிப்பு மிகவும் அதிகம். மூக்குக் கண்ணாடிக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்துக்கு பதில் 5 சதவீதம் வரி விதிக்க வேண்டும்.
ஏசி வசதி இல்லாத ஹோட்டலில் உணவுக்கு 12 சதவீதத்துக்கு பதிலாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும்.வெட் கிரைண்டருக்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களுக்கு செஸ் வரியை விதிக்கக் கூடாது.
கைவினை பொருள்களுக்கு வரி விதிக்கக் கூடாது. கையால் செய்யப்பட்ட தீப்பெட்டிகளுக்கு வரி கூடாது. கையால் செய்யப்பட்ட நகைகளுக்கு குறைந்த அளவு வரி விதிக்க வேண்டும் என்றார் அவர்.