'படேல்கள்' போராட்டத்தை ஒடுக்க அதிரடி.. ரூ1000 கோடி நிதி உதவி திட்டத்தை அறிவித்தது குஜராத் அரசு!
காந்திநகர்: 'இடஒதுக்கீடு கொடு; அல்லது இடஒதுக்கீட்டை ஒழி' என்ற முழக்கத்தை முன்வைத்து படேல் சமூகத்தினர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் முற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ1,000 கோடி நிதி உதவித் திட்டத்தை குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் அறிவித்துள்ளார்.
குஜராத்தில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த படேல்கள், எங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; இல்லையெனில் இடஒதுக்கீட்டு முறையையே ஒழிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு 22 வயது இளைஜர் ஹர்திக் படேல் தலைமை வகித்து வருகிறார்.
பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நேரத்தில் இப்போராட்டத்தை பா.ஜ.க. பெரும் தலைவலியாக கருதுகிறது. இதனால் இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஹர்திக் படேலின் நண்பர் மீது பிரிவினையைத் தூண்டியதாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் நேற்று அதிரடியாக கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகள் உட்பட ரூ1,000 கோடி நிதி உதவித் திட்டங்களை அறிவித்துள்ளார். அதில், அரசுப் பணிகளில் சேருவதற்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்படுகிறது; எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்களுக்கு அளிக்கப்படுவது போல இதர முற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி நிதி உதவி வழங்கப்படும் இதற்கு ரூ1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பவை முக்கிய அம்சங்களாகும்.
மேலும், படேல் சமூகத்தினர் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். நான் 2017ஆம் ஆண்டு வரை முதல்வராக நீடிப்பேன். நிச்சயம் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் ஆனந்திபென் படேல் கூறினார்.
லாலிபாப்...
ஆனால் இந்த அறிவிப்புகளை நிராகரித்திருக்கும் படேல் கிளர்ச்சி குழு தலைவர் ஹர்திக் படேல், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக லாலிபாப் மிட்டாயைத்தான் ஆனந்திபென் அரசு தருகிறது என்றும் விமர்சித்துள்ளார்.