உ.பி. முதல்வராக 'சர்ச்சை' யோகி ஆதித்யநாத் தேர்வானது எப்படி? புதிய தகவல்கள்
உ.பி. முதல்வராக சர்ச்சைக்குரிய யோகி ஆதித்யநாத் தேர்வானது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தப்பிரதேசத்தின் முதல்வராக சர்ச்சைக்குரிய யோகி ஆதித்யநாத் தேர்வானது எப்படி என புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய நபர்களில் முதன்மையானவர் யோகி ஆதித்யநாத். 5 முறை பாஜக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத் தீவிர இந்துத்துவாவாதி.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் பதவிக்கு பாஜகவில் அதிகம் அடிபட்டது மனோஜ் சின்ஹா பெயர்தான்... இவரும் மிகவும் நம்பிக்கையோடு கோவில்களில் வழிபாடு எல்லாம் நடத்தி வந்தார்.

திடீர் அழைப்பு
ஆனால் நேற்று காலை 10 மணிக்கு பின்னர் நிலைமை மாறத் தொடங்கியது. கோரக்பூரில் முகாமிட்டிருந்த யோகி ஆதித்யநாத்தை உடனே டெல்லிக்கு வருமாறு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அழைப்பு விடுத்தார்.

வதந்திகள்
இதனால் சனிக்கிழமை பகல் 11 மணியளவில் புதிய முதல்வர் தொடர்பாக வதந்திகள் பரவ தொடங்கின. புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக்கே யோகி ஆதித்யநாத் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என முதலில் கூறப்பட்டது.

உறுதியானது
பின்னர் பகல் 12 மணியளவில் யோகி ஆதித்யநாத் முதல்வராகிறார் என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் லக்னோவில் இனிப்புகளை கொடுத்து கொண்டாடத் தொடங்கினர்.

பாஜகவின் முகம்
யோகி ஆதித்யநாத் சர்ச்சைக்குரிய நபர்தான்... அதேநேரத்தில் கிழக்கு உத்தரப்பிரதேசத்தை பாஜகவின் கோட்டையாக மாற்றியவரும் அவரே என கூறப்படுகிறது. 2002, 2007, 2012 சட்டசபை தேர்தல்களில் பாஜக அதிக இடங்களை கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் வென்றது யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகள்தான் காரணமாம்.

இதுதான் காரணம்
கடந்த 2014 லோக்சபா தேர்தலில் மோடிக்கு ஆதரவாக நிறைய பிரசார கூட்டங்களை நடத்தியவர் யோகி ஆதித்யநாத். தற்போதைய சட்டசபை தேர்தலிலும் யோகி ஆதித்யநாத்தின் பேச்சுகள் பாஜக வெற்றிக்கு பெரிதும் கை கொடுத்ததாம். இதனால்தான் யோகி ஆதித்யநாத் சர்ச்சைக்குரிய நபராக இருந்தாலும் பாஜக ஆவரை முதல்வராக்கியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications