அண்டார்டிகா பனிப் பாறை உடைந்ததால்.. இந்தியாவுக்கும் ஆபத்து அதிகமாம்!
டெல்லி: அண்டார்டிகாவில் பிரமாண்ட பனிப் பாறை பிளவால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து அதிகம் என்கிறார்கள். காரணம், இந்தியாவில் கடலோர நகரங்கள் அதிகம் என்பதாலும், முக்கிய நகரங்கள் கடலோரத்தில் உள்ளதாலும் இந்த நகரங்களுக்கு ஆபத்து அதிகம்.
Larsen C ice shelf என்ற பகுதியிலிருந்துதான் தற்போது உடைந்து பிரிந்துள்ளது ஒரு பிரமாண்ட பனிப் பாறை. இந்த லார்சன் சி பகுதியிலிருந்து பிரிந்த பனிப்பாறையின் அளவு நமது சென்னை நகரை விட பல மடங்கு பெரிதாகும். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பிளவாக இது நடந்துள்ளது உலகம் முழுவதும் கவலை அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பனிப் பாறையானது தற்போது உடைந்து பிரிந்துள்ளதே தவிர உருகவில்லை. இது உருக ஆரம்பித்தால் கடல் நீர் மட்டம் பெருமளவில் உயரத் தொடங்கும். அப்போதுதான் உலக அளவில் பல ஆபத்துக்களை நாம் சந்திக்க நேரிடும்.
4 டெல்லிக்கு சமம்
பிரிந்துள்ள பனிப் பாறைக்கு ஏ68 என்று பெயரிட்டுள்ளனர். இதன் எடையானது 1 டிரில்லியன் டன்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை அண்டார்டிகாவில் உடைந்து பிரிந்து பனிப் பாறைகளிலேயே இதுதான் மிக மிகப் பெரியது, பிரமாண்டமானது. உடைந்து பிரிந்த பனிப்பாறையின் பரப்பளவு கிட்டத்தட்ட 5800 சதுர கிலோமீட்டராகும். இது நான்கு டெல்லிக்கு சமமானதாகும். ஜூலை 10ம் தேதி தொடங்கி 12ம் தேதிக்குள் இந்த பிளவு நடந்துள்ளது.
2002க்குப் பிறகு
இந்த பனிப் பாறை உடனடியாக உருகாது என்றும் சிறிது காலம் அது கடலில் மிதந்தபடி இருக்கும் என்றும், பிறகு படிப்படியாக உருக ஆரம்பிக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த 1995ம் ஆண்டு அண்டார்டிகாவின் லார்சன் ஏ பகுதியிலும், 2002ம் ஆண்டு லார்சன் பி பகுதியிலும் பெரிய அளவிலான பிளவுகள் ஏற்பட்டன. அதன் பின்னர் தற்போதுதான் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக இருப்பதுதான் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாக்லாந்து மூழ்கலாம்
இதுகுறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த அண்டார்டிக் ஆய்வு கழகத்தின் இயக்குநர் டேவிட் வாகன் கூறுகையில், இதன் காரணமாக கடல்களில் பல மாற்றங்களை நாம் காண நேரிடும். நீர் மட்டம் பல மடங்கு அதிகரிக்கும். இதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்து கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்து வரலாம். பாக்லாந்து தீவு, அர்ஜென்டினாவின் கடலோரப் பகுதிகள், பியூனஸ் அயர்ஸ் நகரம், வடக்கு கிழக்கு பிரேசில் ஆகிய பகுதிகளில் கடல் நீர் மட்டம் பெருமளவு அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கிறார் டேவிட் வாகன்.
இந்தியாவுக்கு ஆபத்து
அதேசமயம், இந்த பனிப் பாறையால் இந்தியாவுக்கும் ஆபத்து அதிகம் உள்ளதாம். கடல் நீர் மட்டம் பெரிய அளவில் உயரும் வாய்ப்பு உள்ளதால் 2050ம் ஆண்டு வாக்கில் கிட்டத்தட்ட 4 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. மும்பை, கொல்கத்தாவுக்குத்தான் ஆபத்து அதிகம் என்றும் அது எச்சரிக்கிறது.
0.1 மில்லி மீட்டர் உயரும்
ஏற்கனவே இமயமலையும் ஒரு பக்கம் உருகி வருவதாலும், இதுபோல கடல் நீர் மட்டம் உயருவதாலும் இந்தியாவின் கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்து அதிகரித்தபடியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பிரபல விஞ்ஞானி மார்க் காப்மேன் கூறுகையில் தற்போது உடைந்துள்ள பனிப் பாறையால் கடல் நீர் மட்டமானது 0.1 மில்லிமீட்டர் அளவுதான் உயரும் என்று கூறியிருக்கிறார். அவர் கூறும் அளவு குறைவாக இருந்தாலும் கூட பாதிப்பு நிச்சயம் அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.