கன்யா குமார் உள்ளிட்ட 4 மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய ஜவஹர்லால் நேரு பல்கலை. முடிவு
டெல்லி: இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக எழுந்த சர்ச்சையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்யா குமார் உள்ளிட்ட 4 மாணவர்களை பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற்ற உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அப்சல் குரு நினைவு தினத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மாணவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இது குறித்து விசாரணை நடத்த கடந்த 10 ஆம் தேதி குழு ஒன்றை துணைவேந்தர் அமைத்தார். பின்னர் அடுத்த நாள் இந்த குழு உயர்மட்டக்குழுவாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கை அளிக்க இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த மார்ச் 11 ஆம் தேதி இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையில் 21 மாணவர்கள் தவறு செய்துள்ளதாகவும், மாணவர்கள், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்ச்சி நடத்தி, பல்கலையின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உயர்மட்டக்குழுவின் பரிந்துரையை தொடர்ந்து, துணைவேந்தர் தலைமையில், கூடி ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்படும் மாணவர்கள், விடுதியை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும், இது குறித்த இறுதி முடிவை நன்கு ஆய்வு செய்த பின்னர் துணைவேந்தர் ஜெக்தீஸ் குமார் மற்றும் மாணவர்களிடம் ஒழுக்கத்தை நிலைநாட்டும் தலைமை அதிகாரி திம்ரி ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.