பதன்கோட் விமானப் படை தளம் குறித்து பாக். உளவுத்துறைக்கு தகவல்களை கொடுத்து கேரளா உளவாளி?
டெல்லி: பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி உள்ள பஞ்சாப் பதன்கோட் விமானப் படை தளம் குறித்து பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்களை தெரிவித்தது அண்மையில் கைது செய்யப்பட்ட கேரளா உளவாளியான விமானப் படை முன்னாள் அதிகாரி ரஞ்சித்தாக இருக்கலாம் என உளவுத்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்காக வேவு பார்த்ததாக கேரளாவைச் சேர்ந்த கே.கே. ரஞ்சித் என்ற விமானப் படை முன்னாள் அதிகாரி அண்மையில் உளவுத்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஃபேஸ்புக் மூலம் ரஞ்சித்தை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் உளவுத்துறையின் பெண்ணிடம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஏராளமான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து ரஞ்சித்தை கைது செய்து உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் தாம் பணிபுரிந்த போதும் பலமுறை பதான்கோட் விமான படை தளத்துக்கு சென்று பார்வையிட்டதை அவர் ஒப்புக் கொண்டிருந்தார்.
ஆகையால் தற்போதைய பதன்கோட் தாக்குதலுக்கான உளவு தகவல்களைக் கொடுத்தது ரஞ்சித்தாகத்தான் இருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரிடம் விசாரணை நடத்த கூடுதல் கால அவகாசம் கோரப்படும் எனவும் கூறப்படுகிறது.