உ.பி, பஞ்சாப் சட்டசபை தேர்தலை முன்வைத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம்? பொன். ராதா பதவியும் பறிப்பு?
டெல்லி: உத்தரப்பிரதேசம், பஞ்சாப் சட்டசபை தேர்தலை முன்வைத்து மத்திய அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதவி பறிபோகலாம் எனவும் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படவில்லை. முதல் முறையாக பெரிய அளவில் வரும் 19 அல்லது 20-ந் தேதிகளில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது; அல்லது ஜூன் 23,24 தேதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல்களை முன்வைத்து
அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா மாநில சட்டசபை தேர்தல்களை முன்வைத்து இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட இருக்கிறதாம். உள்துறை, நிதித்துறை போன்ற முக்கிய இலாகாக்களில் மாற்றம் இருக்காதாம்.
மேலும் ஒரு இணை அமைச்சர்
அதே நேரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் வெளிநாடுகளுக்கு அதிகம் பயணிக்க முடிவதில்லை. ஆகையால் அவர் பணிச்சுமையை குறைக்கும் வகையில் மேலும் ஒரு இணை அமைச்சர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மனோகர் பாரிக்கர் மாற்றம்?
கோவா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மீண்டும் கோவா மாநில அரசியலுக்கு திருப்பி அனுப்ப வாய்ப்பிருக்கிறதாம். ஆனால் மனோகர் பாரிக்கர் இதனை விரும்பவில்லை என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.
காலி இடங்கள்
அஸ்ஸாம் முதல்வரான மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானாந்தா சோனோவால் இடத்துக்கு ஒரு அமைச்சர் நியமிக்கப்பட உள்ளார். அதேபோல் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்த விஜய் சம்ப்பா, பாஜகவின் பஞ்சாப் மாநில தலைவராக்கப்பட்டுள்ளார். இந்த இடத்துக்கும் ஒரு அமைச்சர் நியமிக்கப்பட இருக்கிறார்.
நஜ்மாவுக்கு பதில் அக்பர்?
மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு பதிலாக மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பருக்கு நியமிக்கப்படக் கூடும். மகாராஷ்டிரா பாஜக தலைவர் வினய் சஹஸ்ரபுத்தேவுக்கும் மத்திய அமைச்சராகும் வாய்ப்பிருக்கிறதாம். இதனால் அமைச்சரவையில் இடம்பிடிப்பதாக 'லாபி' வேலைகள் டெல்லியில் பரபரத்து கொண்டிருக்கிறது.
பொன். ராதா பதவி அம்போ!
இதேபோல் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அண்மைக்காலமாக குளச்சல் திட்டத்தை முன்வைத்து ராஜினாமா செய்வேன் என கூறிவருகிறார். உண்மையில் அமைச்சரவை மாற்றத்தின் போது பொன். ராதாகிருஷ்ணன் பதவி பறிக்கப்படலாம் என்பதால் அனுதாபம் தேடும் வகையில் இப்படி கூறிவருகிறார் என பாஜக வட்டாரங்களை மேற்கோள் காட்டி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அது உண்மைதான் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். இந்த அமைச்சரவை மாற்றத்தில் பொன். ராதாகிருஷ்ணன் பதவியும் பறிபோகிறதாம்.