காதி ஆடை விற்பனை இரு மடங்காக உயர்ந்தது என்கிறார் மோடி.. இல்லை என்கிறது புள்ளி விவரம்
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி கூறுவதைபோல, காதி ஆடை விற்பனை இரண்டு மடங்காக உயரவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
காதி ஆடை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி, நடவடிக்கைகள் பல எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக தனது 'மான் கி பாத்' என்ற பெயரிலான ரேடியோ உரையின்போது, காதி ஆடைகளை அனைவரும் விரும்பி வாங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.
சமீபத்தில் 'மான் கி பாத்'தில் ஆற்றிய உரையில், கடந்த ஆண்டு நான் வேண்டுகோள்விடுத்த பிறகு, ஓராண்டில் காதி ஆடைகள் விற்பனை 2 மடங்காக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
ஆனால், லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது கேள்வியொன்றுக்கு அமைச்சகம் அளித்துள்ள புள்ளி விவரத்தில், பிரதமரின் பேச்சுக்கும், காதி விற்பனைக்கும் சிறிதும் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது. ஏனெனில், 2013-14ம் நிதியாண்டுடன் ஒப்பிட்டால், 2014-15ம் நிதியாண்டில், காதி விற்பனை 5.91 சதவீதம்தான் அதிகரித்துள்ளதாம். அதற்கு முந்தைய நிதியாண்டில் காதி விற்பனை 5.82 சதவீத வளர்ச்சியுடன் இருந்துள்ளது. எனவே ஆண்டுதோறும் வளரும் காதி விற்பனை விகிதத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்கிறது புள்ளி விவரம்.
2012-13ம் நிதியாண்டில், காதி விற்பனை ரூ.1021.56 கோடியாக இருந்த நிலையில், 2013-14ம் நிதியாண்டில் அது ரூ.1081.04 கோடியாக உயர்ந்துள்ளது. இது 5.82 சதவீத வளர்ச்சியாகும்.
அதேநேரம், 2014-15ம் நிதியாண்டில், காதி விற்பனை மதிப்பு ரூ.1144.9 கோடியாக உயர்ந்துள்ளது. இது 5.91 சதவீதம் அதிகமாகும். ஆனால் பிரதமர் கூறியதை போல இரு மடங்கு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.