உட்கட்சி பஞ்சாயத்தால்தான் உருளுது சுஷ்மா 'தலை'- உண்மையை உடைத்த பா.ஜ.க. எம்.பி. கீர்த்தி ஆசாத்
டெல்லி: பாரதிய ஜனதாவின் உட்கட்சி பூசலில்தான் லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் ஊடகங்களுக்கு சென்றது என அக்கட்சியின் எம்.பி. கீர்த்தி ஆசாத் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
ஊழல் புகாரில் சிக்கிய ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு இங்கிலாந்து அரசு விசா வழங்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய சர்ச்சை வெடித்திருக்கிறது.
'#BJPs #AsteenKaSaanp & #Arnab conspire against BJP leaders. Guess the snake? IStandWithSushmaSwaraj @SushmaSwaraj https://t.co/08OsjsqpNC
— Kirti Azad (@KirtiAzadMP) June 14, 2015
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. கீர்த்தி ஆசாத் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கீர்த்தி ஆசாத், கட்சியைச் சேர்ந்த ஒருவரே சுஷ்மா ஸ்வராஜ் குடும்பத்துக்கும் லலித் மோடி குடும்பத்துக்கும் உள்ள நெருக்கம் குறித்தும், லலித் விசா விவகாரம் தொடர்பாக அமைச்சரின் பரிந்துரை குறித்தும் தகவல் பரப்பியிருக்கிறார்.
புல்லில் பதுங்கியிருக்கும் அந்த பாம்பு யார் என்று கண்டுபிடியுங்கள். கட்சியின் பிரமுகரும் ஊடக பிரமுகரும்தான் சுஷ்மாவுக்கு எதிராக செயல்படுகின்றனர். நான் சுஷ்மாவை ஆதரிக்கிறேன் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் இந்த ட்வீட்டை, மற்றொரு ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாகவே கீர்த்தி பதிந்துள்ளார். @mahesh10816 என்பவர் ட்வீட்டை ஷேர் செய்து அதற்கு விளக்கமாகவே கீர்த்தி ஆசாத் இதை பதிவு செய்துள்ளார்.
@mahesh10816 ட்விட்டர் பக்கத்தில், டைம்ஸ் நவ் சேனலில் அர்னப் கோஸ்வாமி தவறான செய்தியை பகிர அனுமதித்ததன் மூலம் நிதின் கட்கரி பெரும் தவறை இழைத்துவிட்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ட்வீட்டைதான் ஷேர் செய்து கீர்த்தி தனது கருத்தை பதிந்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி ஆசாத் குறிப்பிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லியா? நிதின் கட்கரியா? அல்லது வேறு யாருமா? என்ற பரபரப்பான விவாதம் டெல்லி அரசியலில் ஹாட் டாபிக்காக இருக்கிறது.